கொட்டும் குளிரிலும் டெல்லியை மிரட்டும் விவசாயிகள்… மோடியின் தூக்கம் கலையவே கலையாதா..?

ஐந்தாவது நாளாக விவசாயிகள் போராட்டம் டெல்லியை மிரட்டிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில், புதிய வேளாண் சட்டம் விவசாயிகளுக்கு மிகவும் நன்மை தரும் என்று மீண்டும் மீண்டும் பேசியிருக்கிறார் மோடி.


மாநில அரசுகள், அரசியல் கட்சிகள், விவசாயிகளின் கருத்துகளை கேட்காமல், உரிய அவகாசம் அளிக்காமல், அவசரம் அவசரமாக மத்திய அரசு பாராளுமன்றத்தில் வேளாண் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டங்கள் முற்றிலும் விவசாயிகளின் நலனுக்கு எதிரானது என்பதுதான் விவசாயிகளின் எண்ணம். 

குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வது, மத்திய உணவுக் கழகம் கொள்முதல் செய்வது இந்த சட்டத்தில் இடம்பெறவில்லை. அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதை அனுமதிக்க மாட்டோம். பெரும் கார்ப்பரேட்டுகள் சந்தைகளில் அனுமதிப்படுவதை ஏற்க மாட்டோம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்துதான் இந்தப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. 

 பாராளுமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றிய அன்றைய தினமே பஞ்சாப்பில் போராட்டம் வெடித்தது. தொடர்ந்து ஒரு மாதக் காலத்திற்கும் மேலாக போராட்டம் நீடித்தது. மத்திய அரசு அம்மாநில அரசையும், விவசாயிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையில் கொள்கை முடிவு என்பதில் இடம்பெற செய்ய மாட்டோம், வாய்மொழி உத்தரவு தருவதாக சொன்னார்கள். அதனை ஏற்க விவசாயிகள் மறுத்தனர். இதனால்தான் போராட்டம் தீவிரமானது. 

போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த மத்திய அரசு, முதல்கட்ட பேச்சுவார்த்தையில் விவசாயிகள் வைத்த கோரிக்கைகளை ஏற்க மறுத்தது. இப்போது போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று சொல்வது, போராட்டத்தை திசை திருப்ப முயற்சிதானேயொழிய, விவசாயிகளக்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்காது. 

 விவசாயிகள் தங்கள் அமைதி வழிப் போராட்டத்தை தொடங்கிவிட்டார்கள். விரைவில் உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட அனைத்து மாநில விவசாயிகளும் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். மத்திய அரசு வரும் 3ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. பேச்சுவார்த்தைக்கு அழைப்பது முக்கியமில்லை. விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதுதான் முக்கியம் என்கிறார்கள்.

இன்னும் சில தினங்களில் மற்ற மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் டெல்லியை நோக்கி கிளம்ப இருக்கிறார்கள். இனியாவது தூக்கத்தில் இருந்து எழுவாரா மோடி..?