ப. சிதம்பரத்தை வீடு புகுந்து இழுத்துச்சென்றது சி.பி.ஐ.! இன்று மோடி நிம்மதியாகத் தூங்குவார்!

நேற்று சி.பி.ஐ.க்கும் ப.சிதம்பரத்துக்கும் தொடங்கிய கண்ணாமூச்சு ஆட்டம் இன்று இரவு முடிவுக்கு வந்திருக்கிறது. தலைமறைவாக இருக்கிறார் சிதம்பரம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தீடீரென காங்கிரஸ் அலுவலகத்தில் தோன்றினார் சிதம்பரம்.


காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ப.சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்து அறிக்கையைப் படித்தார். அந்த அறிக்கையில், ‘’நான் ஜனநாயகம், சுதந்திரத்தில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ, அமலாக்கத்துறை என்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. எனக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை. இந்த வழக்கில் என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் எந்த முதல் தகவல் அறிக்கையும் பதிவுசெய்யவில்லை. 

7 மாதங்களுக்குப் பின், எனது ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகத்துள்ள காரணத்தால், எனது வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.  நான் நீதிமன்ற உத்தரவை நான் மதிக்கிறேன். சட்டத்தையும் மதிக்கிறேன். அதேபோல், விசாரணை அமைப்புகளும் சட்டத்தை மதிக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

சிதம்பரம் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருப்பது தெரிந்ததும் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் அங்கு வந்தனர். அதற்குள் சிதம்பரம் தன்னுடைய வீட்டுக்குக் கிளம்பிவிட்டார். அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர்களான கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்கி ஆகியோரும் வீட்டுக்கு வந்தனர்.

அவர்களைத் தொடர்ந்து வந்த சி.பி.ஐ., அமலாக்கத்துறை மற்றும் லோக்கல் காவல் துறை ஆகியவர்கள் சிதம்பரம் வீட்டுக்குள் ஏறிக்குதித்து நுழைந்தனர். நீண்ட நேர இழுபறிக்குப் பிறகு சிதம்பரத்தை போலீஸ் சி.பி.ஐ. தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்றது.

அங்கு வைத்து அவரிடம் விசாரணை நடைபெறும் என தெரிகிறது. அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால், கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது. 

பின்குறிப்பு : 

மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியது. இதற்கு, ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்தின் உதவியுடன் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

அதைத் தொடர்ந்து, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ், அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.