இட ஒதுக்கீடு அடையும் வரை ஓய மாட்டோம்... ராமதாஸ் மீண்டும் போர்க்கொடி

இனிமேலும் 20% இட ஒதுக்கீட்டில் நாங்கள் ஏமாறுவதாக இல்லை என்று டாக்டர் ராமதாஸ் இன்று மீண்டும் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீடு வன்னியர்களின் சொத்து. அது எளிதாக கிடைத்துவிடவில்லை.


10 ஆண்டுகால போராட்டம்... 21 சொந்தங்களை பலி கொடுத்து தான் எங்களுக்கான சமூகநீதியை வென்றெடுத்துள்ளோம். 20% இட ஒதுக்கீட்டுப் போராட்டம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த போராட்டம். நியூயார்க் டைம்ஸ் இதழில் பாராட்டி எழுதப்பட்ட போராட்டம். எம்.ஜி.ஆரையும், கலைஞரையும் கதிகலங்க வைத்தப் போராட்டம். 

21 உயிர்களைக் கொடுத்து போராடிய வன்னியர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டிருக்க வேண்டிய 20% இட ஒதுக்கீட்டை கலைஞர் சூழ்ச்சி செய்து கூடுதலாக 107 சாதிகளுக்கு அள்ளிக்கொடுத்தார். நல்ல கனி என்று அழுகிய கனியைக் கொடுத்து ஏமாற்றினார். ஒருமுறை கலைஞரிடம் ஏமாந்த நாங்கள் இனியும் யாரிடமும் ஏமாறுவதற்கு தயாராக இல்லை.

 20% இட ஒதுக்கீட்டுக்காக அதை அனுபவிக்கும் எந்த சாதியும் போராடவில்லை; ஆதரவுக் குரல் கூட கொடுக்கவில்லை. அது முழுக்க, முழுக்க வன்னியர்களின் சொத்து. அதை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது. வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டுச் சொத்தை மீட்பதற்காகவே அறவழி தொடர் போராட்டங்களை நடத்துகிறோம். இனியும் எங்களை யாரும் ஏமாற்ற முடியாது. 20% இட ஒதுக்கீட்டை அடையும் வரை ஓய மாட்டோம் என்று கூறியிருக்கிறார்.