இட ஒதுக்கீட்டுக்கு எதிரான உச்சநீதிமன்றத் தீர்ப்பு - விசிகட்சி சீராய்வு மனு தாக்கல்

இட ஒதுக்கீட்டு உரிமையை முழுதாகப் பறிக்கும்விதமாக உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு பிப்ரவரி 7ஆம் தேதி அளித்த தீர்ப்பை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.


அறிக்கை ஒன்றில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இத்தகவலை வெளியிட்டுள்ளார். 

“ இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை அல்ல; இட ஒதுக்கீடு வழங்கவேண்டுமென்பது அரசுக்கு கட்டாயமல்ல; குறிப்பிட்ட சமூகத்தினர் அரசுப் பணிகளில் போதிய அளவில் இடம்பெறவில்லையென்று ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டாலும் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குமாறு நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட முடியாது” என உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

இட ஒதுக்கீட்டு உரிமையை முற்றாகப் பறித்துவிடும் நோக்கில் இவ்வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதங்களை முன் வைத்துள்ளார். எனவே நீதிமன்றத்தைப் பயன்படுத்தி இட ஒதுக்கீட்டு உரிமையை ஒழித்துக்கட்ட பாஜக அரசு செய்துள்ள சதி இந்தத் தீர்ப்பின்மூலம் அம்பலமாகியிருக்கிறது. 

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு இதுவரை சீராய்வு மனு தாக்கல் செய்யாததே பாஜகவின் உள்நோக்கம் என்ன என்பதற்கு சான்றாக உள்ளது. அம்பேத்கர் அரும்பாடுபட்டு பெற்றுத்தந்த இட ஒதுக்கீட்டு உரிமையைக் காக்க எங்கள் கட்சி உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. மத்திய அரசும் தமிழக அரசும் உடனடியாக இவ்வழக்கில் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்யவேண்டும்” என்றும் தொல்.திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.