சட்டப்பேரவை கூடும் நாளில் கோட்டை முன்பு ஆர்ப்பாட்டம் - மார்க்சியக் கட்சி முடிவு

குடியுரிமைத் திருத்தச் சட்ட விவகாரம் தொடர்பான எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக, வரும் 9ஆம் தேதியன்று தமிழ்நாட்டு அரசின் தலைமைச்செயலகம் அமைந்துள்ள ஜார்ஜ் கோட்டை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதென மார்க்சிய இந்திய கம்யூனிசக் கட்சி தீர்மானித்துள்ளது.


சென்னையில் இன்று கூடிய அக்கட்சியின் மாநிலச் செயற்குழுவானது, இது குறித்த தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. 

அதில், ” சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி., ஆகியவற்றை எதிர்த்து தொடர் இயக்கங்கள் இந்திய அளவிலும், தமிழகத்திலும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. சி.ஏ.ஏ. எனும் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் மத்திய பாஜக அரசு குடியுரிமையில் மதத்தை புகுத்தி இந்திய மக்களை மதத்தின் பெயரால் பிளவுப்படுத்துகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை தொடர்ந்து தேசிய மக்கள் பதிவேடு (என்.பி.ஆர்.) எனும் பெயரால் குடியுரிமையை நிரூபிக்க மக்களை நிர்ப்பந்திக்கிறது. குடியுரிமையை நிரூபிக்க தாய், தந்தையர் மற்றும் மூதாதையர் பூர்வீகத்தையும், பிறப்புச் சான்றிதழையும் வற்புறுத்தி கோருகிறது. இதன்படி குடியுரிமையை நிரூபிக்க இயலாதவர்களை சந்தேகத்திற்குரிய குடிமக்களாக்கி நமது குடியுரிமையை பறிக்க முனைந்துள்ளது.

இந்த கணக்கெடுப்பின் தொடர்ச்சியாக தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்.ஆர்.சி) தயாரிக்கவும் திட்டமிடுகிறது. இதனால் தமிழகத்திலேயே கோடிக்கணக்கான மக்கள் தங்கள் குடியுரிமையை இழக்க நேரிடும். என்.பி.ஆர்., என்.ஆர்.சி. அமலாக்கம் இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, இந்துக்கள், கிறித்துவர்கள் உள்ளிட்ட அனைத்து மதங்களையும் சார்ந்த ஏழை, எளிய மக்களையும் பாதிக்கும். இந்திய மண்ணில் பிறந்தவர்களை இந்திய நாட்டிலேயே - தமிழகத்திலேயே குடியுரிமையற்றவர்களாக்கி அகதிகளாக்கும் நடவடிக்கை மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. 

இந்த பேராபத்தை உணர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கேரள இடது முன்னணி அரசு தொடங்கி 13க்கும் மேற்பட்ட மாநில அரசுகள் சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி.யை நிராகரிக்க முடிவு செய்துள்ளன. பாஜக அணியில் உள்ள சில மாநில அரசுகள் கூட என்.பி.ஆரை.ஐ நிராகரித்துள்ளன. ஆனால் தமிழகத்தை ஆளும் அஇஅதிமுக அரசு இதைப்பற்றியெல்லாம் கிஞ்சித்தும் கவலை கொள்ளாமல் மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு துணை நிற்கிறது. இதனால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என போதனையும் செய்கிறது.

தமிழக அரசின் சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி.க்கு ஆதரவான நிலைபாட்டை கண்டித்தும், குடியுரிமையை பறிக்கும் சட்டத் திருத்தத்தையும், கணக்கெடுப்பையும், பதிவேட்டையும் எதிர்த்து போராடும் மக்களின் உணர்வை கருத்தில்கொண்டும் மார்ச் 9 தொடங்கி நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி.ஐ ஏற்க மாட்டோம் எனவும்,

தமிழகத்தில் என்.பி.ஆர்., அமல்படுத்தப்படாது எனவும் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 2020 மார்ச் 9 அன்று காலை 10 மணியளவில் கோட்டை முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என மாநில செயற்குழு தீர்மானித்துள்ளது.” மார்க்சிய கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.