கோவில்பட்டியில் ரயில்களை நிறுத்த வேண்டும்.. வைகோ கோரிக்கை.

கோவில்பட்டி வழியாக நாள்தோறும் 27 பயணிகள் தொடரிகள் இரு வழிகளிலும் ஓடிக் கொண்டு இருந்தன. முன்பதிவின் மூலமாக, நாள்தோறும் ரூபாய் 4 இலட்சம் என ஆண்டுக்கு ரூபாய் பத்துக் கோடி, மதுரைக் கோட்டத்திற்கு வருவாய் பெற்றுத் தருவதால், கோவில்பட்டி நிலையம், ‘ஏ’ கிரேடு தகுதி பெற்று இருக்கின்றது.


ஆனால், இப்போது பாதித் தொடரிகள்தான் ஓடுகின்றன. அதிலும், நாகர்கோவில்-சென்னை விரைவுத் தொடரி எண் 06064, மதுரையில் இருந்து நாள்தோறும் இரவு 11 மணிக்குப் புறப்படும் புனலூர் விரைவுத் தொடரி எண் 06731, 06730, நாகர்கோவில் -கோவை விரைவுத் தொடரி எண் 02667, சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரும் அதிவிரைவுத் தொடரி எண் 02633 ஆகியவை, கோவில்பட்டி நிலையத்தில் நிற்காமல் செல்கின்றன. 

மேலும், வாரந்தோறும் புதன், வெள்ளி ஆகிய நாள்களில் மட்டுமே ஓடுகின்ற, கன்னியாகுமரி- தில்லி நிஜாமுதீன் விரைவுத் தொடரி எண் 06012, வெள்ளிக்கிழமை மட்டும் ஓடுகின்ற நாகர்கோவில்-சென்னை வண்டி எண் 06064 ஆகிய தொடரிகளும் கோவில்பட்டி நிலையத்தில் நிற்பது இல்லை. 

பொதிகை, நெல்லை, கன்னியாகுமரி என்ற பழந்தமிழ்ப் பெயர்களில் ஓடிக்கொண்டு இருந்த அத்தனைத் தொடரிகளின் பெயர்களையும் மறைத்து, சிறப்பு ரயில்கள் என ஒரே பெயரில் இயக்குகின்றார்கள். இப்படிப் பெயர்களை மாற்ற வேண்டிய தேவை என்ன? யாருடைய அழுத்தத்தின் பெயரில் மாற்றினார்கள்? இது தேவை அற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் செயல். தமிழக மக்களின் உணர்வுகளோடு தெற்கு ரயில்வே விளையாடக் கூடாது; வழக்கமான பெயர்களிலேயே தொடரிகளை இயக்க வேண்டும் என வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.