பட்ஜெட் போடுறதுக்கு முன்னாடி கொஞ்சம் நில்லுங்க. இதுவரை அறிவித்த 46 திட்டங்களின் நிலை என்ன? பன்னீருக்கு கேள்வி எழுப்பும் சட்டப்பஞ்சாயத்து.

ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போதும் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கப்படுவதும், சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்படுவதும் வழக்கமான நடைமுறை ஆகும்.


குறிப்பாக அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், வருகிற பிப்14 தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் ஏராளமான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த சூழலில், சட்ட பஞ்சாயத்து இயக்கம் தொடர்ந்து வலியுறுத்திவரும் கோரிக்கை ஒன்றை மீண்டும் குறிப்பிட விரும்புகிறோம். 

ஒவ்வொரு பட்ஜெட்டின் போதும் புதுப்புது திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டங்கள் எல்லாம் முறையாக செயல்படுத்தப்பட்டனவா, கைவிடப்பட்டனவா என்பது குறித்தான அறிக்கை எதுவும் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது வெளியாவதில்லை. பட்ஜெட் வாசிக்கப்படும், பின்பு துறைவாரியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறும், அரசின் கொள்கை விளக்கக் குறிப்புகள் வெளியிடப்படும்.

அத்தோடு பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்துவிடும். இப்படிப்பட்ட நடைமுறையால் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களின் இன்றைய நிலை என்ன என்பதை பொதுமக்களால் அறிந்துகொள்ள முடிவதில்லை. எனவே, பட்ஜெட் தாக்கலின்போதோ அல்லது பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவதற்குள்ளோ கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் இன்றைய நிலை என்ன என்பது குறித்தான “திட்ட நிலை அறிக்கை” யை நிதியமைச்சர் வெளியிட வேண்டும்.

இந்த அறிக்கையில், திட்டம் தொடங்கப்பட்டு விட்டதா- திட்டமிடல் நிலையில் உள்ளதா - எத்தனை சதவிகிதப் பணிகள் முடிந்துள்ளன - எப்போது முழுமையடையும்- தவிர்க்க இயலாத காரணங்களால் திட்டம் கைவிடப்பட்டதா - முழுமையாக நிறைவேற்றப்பட்டுவிட்டதா- என்பது குறித்தான விவரங்கள அடங்கியிருக்க வேண்டும். 

கடந்த 2 ஆண்டு பட்ஜெட் உரை அறிவிப்புகளை ஆய்வு செய்தபோது 46 முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இதில் எத்தனை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன என்பது எப்படி பொதுமக்களுக்குத் தெரியும்..?

எடுத்துக்காட்டாக... 2018 _ -2019 பட்ஜெட் உரையில் கீழ்கண்ட அறிவிப்புகள் இருந்தன. 2 இலட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும் (- மாவட்டத்திற்கொரு சைபர் கிரைம் காவல்நிலையம் அமைக்கப்படும்) அத்திக்கடவு-அவினாசி குடிநீர் திட்டத்திற்கு ரூ250 கோடி ஒதுக்கீடு. தாமிரபரணி-கருமேனியாறு நதிநீர் இணைப்புத்திட்டத்திற்கு ரூ.100கோடி ஒதுக்கீடு. முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் 20,000 வீடுகள் கட்டித்தரப்படும்- ரூ.420 கோடி செலவில். 

இப்படி ஒவ்வொரு பட்ஜெட்டிலும் பல நலத்திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. ஆனால், இவற்றின் தற்போதைய நிலை..?? எத்தனை இலட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு அளிக்கப்பட்டது..? ஆதி திராவிட விடுதி கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுவிட்டனவா..? அத்திக்கடவு-அவினாசி திட்டம் என்ன ஆனது..? - தாமிரபரணி நதிநீர் இணைப்பின் நிலை என்ன..?

கொடுங்கையூர், பெருங்குடி மீட்டெடுக்கப்பட்டுவிட்டனவா..? சென்னையில் மறுகுடியமர்விற்கு எத்தனை ஆயிரம் குடியிருப்புகள் கட்டப்பட்டன..? தமிழக அரசானது எந்தப்பணியையும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டுவதற்கில்லை. வருடந்தோறும் பல்லாயிரக்கணக்கான கோடிகளில் திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. ஆனால், திட்டமிட்டபடி பணிகள் செய்யப்பட்டனவா என்பதுதான் கேள்வி. அதில், ஊழல்-முறைகடுகளால் தாமதமானதா என்பதுதான் கேள்வி.

பாலம் கட்டுவதற்கான பணிகள் விரைவுபடுத்தப்படவில்லை என்றால், சில ஆண்டுகளில் திட்டமதிப்பீடு இருமடங்காகிவிடும். ஆகவே, மக்களின் வரிப்பணமானது செலவழிக்கப்படும்விதத்தில் முறையான திட்டமிடல், செயலாக்கம் என்பது மிகவும் அவசியமாகிறது. 4இலட்சம் கோடி கடனில் இயங்கும் தமிழக அரசின் நிதி நிர்வாகத்தை முறைப்படுத்த இதுபோன்ற சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.

அப்போதுதான், அரசின் திட்டங்கள் யாரால் தாமதமாகின்றன, அதற்குப் பொறுப்பானவர்கள் யார் என்பது அரசுக்கும், மக்களுக்கும் தெரியும். மக்களின் பணம் முறையாக செலவிடப்படுவது உறுதிசெய்யப்படும். இதனைக் கருத்தில் கொண்டு, பட்ஜெட் தாக்கலின்போதோ அல்லது பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவதற்குள்ளோ கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்ஜெட் அறிவிப்புகளின் இன்றைய நிலை என்ன என்பதை விளக்கும் “திட்ட நிலை அறிக்கை 2020 நிதியமைச்சர் வெளியிட வேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோருகிறது.

ஊடகங்கள் இதுகுறித்து, முதல்வர்-துணை முதல்வரிடம் கேள்விகள் எழுப்பி அவர்களின் விளக்கங்களை மக்களுக்குத் தெரிவிக்கவேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் கேட்டுக்கொண்டுள்ளார்.