எடப்பாடிக்கு ஒன்னு! டிடிவிக்கு ரெண்டு! தொடங்கியது சடுகுடு ஆட்டம்!

தேர்தலுக்குப் பிறகு ஆட்சி எந்த பஞ்சாயத்தும் இல்லாமல் செல்லவேண்டும் என்பதற்காக விருத்தாசலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு ஆகிய மூன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு கொறடா ராஜேந்திரனின் புகாரின் பேரில் சபாநாயகர் தனபால் நேற்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.


இந்த விவகாரத்தில் தினகரன் டென்ஷான் ஆவார் என்று நினைத்தால், ஸ்டாலின் கோபமாக பல்வேறு அறிக்கை விட்டு நீதிமன்றம் போகும் அளவுக்கு நிலைமை போகிறது. அதனால் அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கிவிட்டார் முதல்வர் எடப்பாடி.

அந்த மூவரையும் பணத்தால் அடித்து வளைத்து இழுத்துவரும் பொறுப்பு அமைச்சர் சி.வி..சண்முகத்துக்கு கொடுக்கப்பட்டதாம். அதில் முதல் கட்டத்தை மிகச்சிறப்பாக செய்துமுடித்துவிட்டார் சண்முகம். ஆம், கள்ளக்குறிச்சி பிரபு இப்போது அ.தி.மு.க.வில் மீண்டும் ஐக்கியமாகிவிட்டார்.

கள்ளக்குறிச்சி தொகுதியிலுள்ள தியாகத்துருகத்திலுள்ள பிரபுவின் வீட்டுக்கே போன அமைச்சரின் ஆட்கள், உறவுகள், நட்புகள்,  அனைவரிடமும் பேசி பிரபுவின் மனதைக் கலைத்து கொடுக்க வேண்டியதைக் கொடுத்திருக்கிறார்கள். தினகரனை நம்பிச்சென்ற 18 எம்.எல்.ஏ.க்களும் கேவலப்பட்டு நிற்பதை சுட்டிக்காட்டியதும் பிரபுக்கு வெளிச்சம் கிடைத்துவிட்டதாம்.

உடனே, அவர் மூலமாகவே மீதமுள்ள இருவரையும் வளைக்கும் வேலை நடந்திருக்கிறது. இந்த விவகாரம் தெரிந்ததும் தினகரனின் ஆட்கள் கலைச்செல்வன், ரத்தினசபாபதியை தூக்கிப் போய்விட்டார்கள். இவர்களை இப்படியே விட்டுவைத்தால் எந்த நேரமும் திசை மாறிவிடுவார் என்று அச்சப்பட்டு ஒரு சிறப்பான சம்பவம் செய்துவிட்டனர்.

ஆம், இந்த இருவரிடமும் எதுவும் கேட்காமல், ஆலோசனை செய்யாமல்  அவர்கள் பெயரில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை அ.ம.மு.க.வினர் தாக்கல் செய்துவிட்டனர். அதாவது  அருப்தி எம்.எல்.ஏ.க்கள் மூவரில் அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன் ஆகிய இருவரும் தங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்வது போன்று வழக்கு பதிவு செய்துவிட்டனர்.

இப்போ என்ன செய்வீங்க என்று எடப்பாடியைப் பார்த்து சிரிக்கிறது தினகரன் அணி. ஆனால், எடப்பாடி தரப்பும் விடுவதாக இல்லையாம், இன்னமும் ஆள் பிடிக்கும் வேலை நடந்துகொண்டுதான் இருக்கிறது. பார்க்கலாம்...