ரயில்வேயில் தமிழர்களுக்கு இடம் இல்லையா? நாடாளுமன்றத்தில் கதறிய திருமாவளவன்!

ஒவ்வொரு துறையிலும் தமிழர்களை புறக்கணிக்கும் காரியத்தை மத்திய அரசு செய்துவருகிறது.


இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் தமிழுக்காக உரக்கக் குரல் கொடுத்திருக்கிறார் திருமாவளவன். அவர் பேசியது இதுதான். உலகிலேயே மூன்றாவது பெரிய துறை நமது இந்திய இரயில்வே துறை. நான் தென்னக இரயில்வேயில் நடைபெறும் சில பிரச்சனைகள் குறித்து உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.  

தென்னக இரயில்வேயில் பணிநியமனங்களின் போதும் தொழிற்பழகுனர் பயிற்சி   நியமனங்களின் போதும் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கே (அந்த அந்த மாநிலங்களைச் சார்ந்தவர்களுக்கே) 80% வழங்க வேண்டும் என சட்டம் இருக்கிறது. ஆனால், அண்மைக்காலமாக கடந்த 14 ஆண்டுகளில் ஏறத்தாழ 15,000 பேர் அப்ரண்டிசிப் பயிற்சி பெற்று வேலைக்காக காத்திருக்கிறார்கள். அண்மையிலே திருச்சி பொன்மலை பகுதியில் அப்ரண்டிசிப் பயிற்சிக்காக தேர்வு நடைபெற்றது. அதில் 1765 பேர் தேர்வு செய்யப்பட அறிவிப்புச் செய்யப்பட்டிருந்தது.

இரயில்வே தேர்வில் வடஇந்தியாவைச் சார்ந்த 1600 பேருக்கு வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் 165 பேர் மட்டுமே வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள்.இந்த ஓரவஞ்சனை ஏன் நடக்கிறது என்பதை மாண்புமிகு இரயில்வே துறை அமைச்சர் கவனிக்க வேண்டும், இது குறித்து ஒரு ஆய்வை நடத்த வேண்டும்.

இது தொடர்பாக அந்த சங்கத்தைச் சார்ந்த நிர்வாகிகள் உயர்நீதிமன்றத்திலே ஒரு வழக்கு தொடுத்திருக்கிறார்கள். அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்கில் அவர்கள் சிபிஐ விசாரணை கேட்டு கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். ஏனென்றால் அதற்காக ஆர்ஆர்பி நடத்துகிற தேர்விலும் கூட ஊழல் முறைகேடுகள் நடைபெற்றிருக்கிறது என்பதை அவர்கள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.  

தமிழ் படித்த மாணவர்களை விட பிற மாநிலங்களைச் சார்ந்த தமிழ் தெரியாத மாணவர்கள் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்பது எவ்வளவு பெரிய அதிர்ச்சியான தகவல் என்பதை மாண்புமிகு அவைத்தலைவர் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, எழுத்துத் தேர்விலும் அங்கே ஊழல் முறைகேடுகள் நடக்கின்றன. 

திட்டமிட்டு வடமாநிலங்களைச் சார்ந்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு தரப்படுகிறது. தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இது ஒரு மாபெரும் அநீதி. இதை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கவனத்துக்கு எடுத்துக்கொண்டு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல அந்தந்த மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கு அங்கே முக்கியத்துவம் தரவேண்டும் முன்னுரிமை தர வேண்டும். குறிப்பாக பியூன், ட்ரக் மேன், கேங் மேன், சானிட்டரி வோர்கர் போன்ற வேலைகளில் தான் இந்த முறைகேடுகள் நடக்கின்றன.

சென்னை இரயில் நிலைய அதிகாரிகள் பிற அதிகாரிகளோடு தொடர்பு கொள்கிற போது இந்தியில் தான் பேச வேண்டும் என்கிற சுற்றறிக்கையை பிறப்பித்தார்கள். ஆனால், அந்தந்த பகுதியைச் சார்ந்த அந்த மொழியைச் சார்ந்தவர்களைத் தான் வேலையில் நியமனம் செய்ய வேண்டும் என நம் சட்டம் சொல்கிறது. அந்த மொழியைச் சார்ந்தவர்களுக்கு வேலை நியமனம் இல்லாத காரணத்தால் பிற மாநிலத்தைச் சார்ந்தவர்கள் இருக்கிற காரணத்தால் அவர்களுக்கு ஆங்கிலமும் தெரியவில்லை பிராந்திய மொழிகளாக இருக்கக் கூடிய தமிழ் போன்ற மொழிகளும் தெரியவில்லை. இதனால் அவர்கள் வேறு மொழியை பேசக்கூடிய நிலை ஏற்படுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, தயவுகூர்ந்து மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு நான் விடுக்கிற வேண்டுகோள் சட்டத்தின்படி வேலைவாய்ப்பில், தொழிற்பழகுனர் பயிற்சியில் அந்தந்த மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து பணிநியமனங்களை செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

மோடி காதில் விழுந்தால் சரிதான்.