அதானி குழுமத்திற்குச் சொந்தமான மருத்துவமனையில், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 1000 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளதாக, குஜராத் அரசு அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளது.
மோடியின் நண்பர் அதானி மருத்துவமனை மர்மம்! 1000 பச்சிளம் குழந்தைகள் தொடர் மரணம்!

குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில், அதானி ஃபவுண்டேஷன் சார்பாக, ஜிகே ஜெனரல் ஹாஸ்பிடல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் பிரசவ சிகிச்சை சரிவர செய்யப்படுவதில்லை என்றும், இதனால், குழந்தை பிறப்பு இறப்பு விகிதத்தில், பெரும் சிக்கல் நிலவுகிறது என்றும் புகார் கூறப்படுகிறது.
இதன்பேரில், குஜராத் சட்டப்பேரவையில் அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ சன்டோபென் ஆரதியா, எழுத்துப்பூர்வமான கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். அதற்கு, துணை முதல்வர் நிதின் பட்டேல் பதில் அளித்துப் பேசினார்.
அப்போது, கடந்த, 5 ஆண்டுகளில் மட்டும் அதானி ஃபவுண்டேஷன் நடத்தும் ஜிகே ஜெனரல் மருத்துவமனையில் 1,018 குழந்தைகள் இறந்துள்ளதாகக் கூறினார். இதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதுபற்றி கடந்த ஆண்டு மே மாதம் விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
அந்த விசாரணைக்குழுவின் அறிக்கையில், குழந்தைகள் இறப்பிற்கு வெவ்வேறு மருத்துவ காரணங்கள் உள்ளதாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. தொற்று நோய்கள், சுவாசக் கோளாறு, பிறக்கும்போது ஏற்படும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இப்படி குழந்தைகள் இறக்க நேரிடுவதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறிப்பிட்ட மருத்துவமனையில் குழந்தைகளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், மருத்துவ விதிமுறைகளுக்கு உள்பட்டதாகவே உள்ளன என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இவற்றை துணை முதல்வர் நிதின் படேல் மேற்கோள் காட்டி பேசியுள்ளார். எனவே, சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது அரசியல் உள்நோக்கங்களுக்காக, குற்றம் சாட்டுவது ஏற்புடையதல்ல என்றும்
அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான தொழிலதிபர் அதானி, இந்தியா மட்டுமின்றி,
சர்வதேச அளவில் மோடியை பயன்படுத்தி, மருத்துவம் மட்டுமின்றி பல்வேறு துறைகளிலும் தனது வர்த்தக சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.