ஆந்திர மாநிலம் வரதய்யாபள்ளம் கல்கி ஆசிரமத்தில் வருமானவரித்துறை ரெய்டு நடைபெற்றதை அடுத்து தலைமறைவான ஆசிரம நிறுவனர் விஜயகுமார் அவரது மனைவியை போலீசார் தேடிவருகின்றனர்.
கல்கி பகவானை காணவில்லை..! அம்மா பகவானும் மாயம்..! அதிர்ச்சியில் ஆசிரம பக்தகோடிகள்! காரணம் இது தான்..!
சென்னையை சேர்ந்த விஜயகுமார் என்பவர் தன்னை கல்கியின் அவதாரம் எனக்கூறிக்கொண்டு ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள வரதய்யாபள்ளம் கிராமத்தில் ஆசிரமம் நடத்தி வருகிறார். இவர் சென்னையில் டான் போஸ்கோ பள்ளியில் படித்தார். வைஷ்ணவா கல்லூரியில் பட்டப் படிப்பு முடித்தார். எல்ஐசி ஏஜெண்ட்டாகவும் இருந்து வந்துள்ளார்.
ஆந்திராவில் கல்கி ஆசிரமம் தொடங்கியவுடன் பக்தர்களின் பணம் கொட்டத் தொடங்கியது. இதனால் வெளிநாடுகளிலும் கல்கி ஆசிரமம், ரியல் எஸ்டேட், கட்டுமானம் தொழிலும் செய்து வந்துள்ளார் விஜயகுமார். அவரது மகன் கிருஷ்ணா நடத்தி வரும் "வெல்னஸ் குரூப்" என்ற பெயரில் உள்ள குழுமம் வரி ஏய்ப்பு செய்வதாக, வருமான வரித்துறையினருக்கு புகார்கள் வந்துள்ளன.
இதையடுத்து சாமியார் கல்கியின் ஆசிரமம், ஆன்மீகப் பயிற்சி மையங்களில் வருமான வரித்துறையி நடத்திய சோதனையில், ரூ.43.9 கோடி, வெளிநாட்டு கரன்சிகள் இந்திய மதிப்பில் ரூ. 18 கோடி, 88 கிலோ தங்க நகைகள், 1271 காரட் வைரம் என 93 கோடி ரூபாய் மதிப்பிலான கணக்கில் காட்டாத பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் 500 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதையும் வருமானவரித்துறை கண்டுபிடித்துள்ளது. விஜயகுமாரும், அவரது மகனும் இந்தியாவிலும், அமெரிக்கா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூரிலும், வரி ஏய்ப்புக்கு வசதியான வெளிநாடுகளிலும் பல நிறுவனங்களில் முதலீடுகள் செய்துள்ளதாகவும் வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஆசிரமத்தை நிறுவிய கல்கி பகவானை காணவில்லை என கூறப்படுகிறது. அவர்களை பிடித்தால் மட்டுமே மேலும் எங்கு எங்கு எவ்வளவு வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளது என தெரியவரும் என வருமானவரித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.