காவேரி கூக்குரல் நிதி வசூலில் முறைகேடு என சர்ச்சை! பதறிப் போன ஜக்கிவாசுதேவ் வெளியிட்ட அறிக்கை!

காவேரி கூக்குரல் என்ற பெயரில் காவிரி கரையோரங்களில் மரம் நட ஈஷா யோகா மையம் பணம் வசூலிப்பதில் முறைகேடு நடைபெறுவதாக எழுந்த புகார் குறித்து அந்த அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.


இது தொடர்பாக ஈஷா மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, காவேரி கூக்கூரல் இயக்கத்தின் மூலம் பெறப்படும் நிதியை ஈஷா அறக்கட்டளை நிர்வகிக்கபோவது இல்லை. அதற்கு பதிலாக, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி, உலக வன உயிர் நிதியத்தின் இந்திய தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட 9 பேர் அடங்கிய குழு தான் அந்நிதியை நிர்வகிக்க போகிறது.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் காவேரி நதிக்கு புத்துயிரூட்டவும் ‘காவேரி கூக்குரல்’ என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தொடங்கியுள்ளார். இவ்வியக்கத்தின் மூலம் கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டில் காவேரி வடிநிலப் பகுதிகளில் அமைந்துள்ள விவசாய நிலங்களில் அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கோடிக்கணக்கில் மரக் கன்றுகள் உற்பத்தி செய்வதற்காக பொதுமக்களிடம் இருந்து ஒரு மரக் கன்றுக்கு ரூ.42 என்ற முறையில் நிதி திரட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு பெறப்படும் கோடிக்கணக்கான நிதியை ஈஷா அறக்கட்டளை நிர்வகிக்க போவது இல்லை. 

அதற்கு பதிலாக, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி திரு.அரிஜித் பஷயத் (சூழலியல் பாதுகாப்புக்காக வலுவான சட்டப் போராட்டம் நடத்தியவர்), பத்ம பூஷண் விருது பெற்ற பிரபல பெண் தொழில் அதிபரும் பயோகான் நிறுவனத்தின் தலைவருமான திருமதி.கிரண் மசூம்தார் ஷா (டைம் பத்திரிக்கை வெளியிட்ட உலகளவில் ஆளுமைமிக்க பெண் தொழில் முனைவோர் பட்டியலில் இடம்பெற்றவர்),

உலக வன உயிர் நிதியத்தின் இந்திய தலைமை செயல் அதிகாரி திரு.ரவி சிங், மத்திய நீர் வளம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு துறையின் முன்னாள் செயலாளர் திரு.சசி சேகர், மத்திய வேளாண் துறையின் கீழ் இயங்கும் சிறு விவசாயிகள் வேளாண் வர்த்தக அமைப்பின் முன்னாள் மேலாண் இயக்குநர் திரு.பிரவேஷ் சர்மா, டாடா ஸ்டீல் நிறுவனத்தின் முன்னாள் துணை தலைவர் திரு.பி.முத்துராமன், இஸ்ரோவின் முன்னாள் தலைவர் திரு.ஏ.எஸ்.கிரண் குமார்,

கர்நாடக அரசின் முன்னாள் கூடுதல் தலைமை செயலர் திரு.டி.என்.நரசிம்ம ராஜூ, இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் (சிஐஐ) இயக்குநர் திரு.சந்திரஜித் பானர்ஜி ஆகிய 9 பேர் அடங்கிய குழு தான் ‘காவேரி கூக்குரல்’ இயக்கத்தின் நிதிகளை நிர்வகிக்க உள்ளது. மேலும், வரவு செலவுக் கணக்குகளை தணிக்கை செய்வதற்காக மதிப்புமிக்க ஒரு தணிக்கை குழுவும் அமைக்கப்பட உள்ளது.

(இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு: https://www.ishaoutreach.org/en/cauvery-calling/blog/our-board-members) ஏற்கனவே, வேளாண் காடு முறைக்கு மாறும் விவசாயிகளுக்கு முதல் 4 ஆண்டுகள் மானியம் வழங்க இரு மாநில அரசுகள் கொள்கை அளவில் சம்மதம் தெரிவித்துள்ளன. காவேரி கூக்குரல் இயக்கம் மேற்கொண்ட விழிப்புணர்வு பிரச்சாரத்தால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் நிலங்களில் மரங்கள் வளர்க்க விருப்பம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஒவ்வொருவரிடம் இருந்தும் 42 ரூபாய் வசூலித்து ஈஷா பெரிய அளவில் நன்கொடையை குவிப்பதாக புகார் எழுந்தது. மேலும் அந்த நன்கொடை உண்மையில் மரம் நடத்தான் பயன்படுகிறதா? என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த நிலையில் தான் ஜக்கிவாசுதேவ் அறிவுறுத்தலின் படி இப்படி ஒரு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.