பொம்பளைங்கன்னா இவ்வளவு கேவலமா குருமூர்த்தி..? வாய் நீளம் ஜாஸ்தியாயிடுச்சே!

ப.சிதம்பரம் கைது செய்யப்படுவதற்கு முக்கிய காரணகர்த்தா என்று கருதப்படுபவர்களில் ஆடிட்டர் குருமூர்த்தியும் ஒருவர். ரஜினியை அரசியலுக்கு இழுத்துவருவதற்காக கடுமையாக போராடி வருபவர்.


அதனாலோ என்னவோ, பெண்கள் விஷயத்தில் ரஜினியைப் போலவே கேவலமாகப் பேசியிருக்கிறார். 30 சதவிகிதப் பெண்கள்தான் பெண்மையுடன் இருக்கிறார்கள் என்று குருமூர்த்தி பேசியது இன்று பெரிய விவாதமாக மாறியுள்ளது. இந்த நிலையில், அவர் பேசிய விவகாரத்தை எடுத்து விளாசியிருக்கிறார் எழுத்தாளர் சாவித்திரி கண்ணன்.

குருமூர்த்தி என்றாலே கட்டுத் தட்டிபோன பழமைவாதம்! யதார்த்தங்களை உள்வாங்க மறுக்கும் பிடிவாதம்!  தன்னிடமும்,தன்னைச் சார்ந்தவர்களிடமும் இருக்கும் குறைகளை ஒரு சிறிதும் உணர மறுப்பதோடு, அடுத்தவர்களிடம் அதிக குறைகளைக் காணும் இயல்பு! இவை தான் குருமூர்த்தி அவர்களைக் குறித்து என் மனதில் படிந்துள்ள பிம்பம்.

பெண்களைப் பற்றிய அவரது பார்வை என்னை பொறுத்தவரை புதிதல்ல! ஆச்சரியமளிக்க கூடியதுமல்ல. இந்த மாதிரியாக அவர் ஆர் எஸ் எஸ் மேடைகளிலோ, சுதேசி இயக்க இதழ்களிலோ பேசினாலோ, எழுதினாலோ யாரும் அவரை கேட்கப் போவதில்லை. மாறாக விரும்பி ஆமோதித்து இருப்பார்கள்.

ஆனால்,ஒரு பொது சபையில், ஊடகங்கள் மத்தியில் தயக்கமில்லாமல் பேசினால் எப்படிப்பட்ட எதிர்வினை ஏற்படும் என்பது தெரியாமல் பேசியிருப்பார் என்றும் தோன்றவில்லை. இது தான் பழமைவாத இண்டலக்சுவல் அரகண்ட்டிற்கான இலக்கணம்!

காலையில் நான் சில பெண்களிடம், குறிப்பாக அவரது பிராமண சமூகத்து சகோதரிகள் சிலரிடம் பேசிய போது அவர்களுமே கூட அவரது,

’’30% பெண்கள் தான் இன்று பெண்மையோடு இருக்கிறார்கள்...’’ என்ற பேச்சில் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தினர். உண்மையில் இன்று பிராமண சமூகத்து பெண்களே அதிக முற்போக்காக உள்ளனர்.

பெண்மை என்பதற்கு அவர் என்ன மாதிரியான அளவுகோலை வைத்துள்ளார்...? குடும்பத்திற்காக தன் வாழ்வை முற்றிலும் தியாகம் செய்யக் கூடிய, எந்தவித எதிர்பார்ப்புகளுமற்று தன்னை வருத்திக் கொள்ளக் கூடிய,

சுயமாக சிந்திக்க மறுத்து தான் சார்ந்த ஆண் சொல்வதை மறு பேச்சின்றி ஏற்க கூடிய..., என்று ஒரு பட்டியலே வாசிப்பார். அதாவது, பெண்களின் தியாகத்தில் குளிர்காயும் சென்ற நூற்றாண்டு ஆணாதிக்க மனோபாவமே அவரது பெண்மை குறித்த மதிப்பீடு! என்று கூறியிருக்கிறார்.