13 வயது சிறுமியுடன் 4 பேர் பாலியல் வல்லுறவு! கஞ்சா கொடுத்து இளம் பெண் ஒருவர் உதவிய கொடூரம்!

மும்பை: 13 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த புகாரில், ஒரு பெண் மற்றும் 3 ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.


மும்பையின் வடக்கே உள்ள புறநகர்ப்பகுதியான மலாட் அருகே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறிப்பிட்ட சிறுமியை அவரது நண்பர்கள் லஹுகார் தாம்நகருக்கு, கடந்த செவ்வாயன்று பார்ட்டி ஒன்றில் பங்கேற்க அழைத்துச் சென்றுள்ளனர்.அங்கே, சிறுமியின் நண்பர்களுடன், மேலும் 3 பேர் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. பார்ட்டியில் எல்லோரும் மது அருந்தியுள்ளனர். அப்போது, இந்த சிறுமிக்கு, குளிர்பானம் கொடுத்துள்ளனர். 

ஆனால், அதில் கஞ்சா கலக்கப்பட்டிருந்துள்ளது. இதைக் குடித்ததும் சிறுமி மயங்கிவிடவே, அவளை தனிமைப்படுத்திய அந்த 6 பேரும் பலமுறை தொடர்ச்சியாக, மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதையடுத்து, சுய நினைவு திரும்பிய  அந்த சிறுமி நள்ளிரவில் வீட்டிற்கு வரவே, அவரது தாய், கடுமையாக திட்டியுள்ளார். ஆனால், சிறுமி எதுவும் பேசாமல், அதிர்ச்சி அடைந்தவளைப் போல இருந்துள்ளார். 

மறுநாள் காலை விடிந்ததும், சிறுமிக்கு கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதன்பேரில்,  டாக்டருக்கு அழைத்துச் சென்றபோது, தன்னை 6 பேர் பலாத்காரம் செய்ததாகக் கூறியிருக்கிறார். அதிர்ந்துபோன  பெற்றோர் உடனடியாக, போலீசாரிடம் புகார் அளித்தனர்.  இதையடுத்து, வழக்குப் பதிந்த போலீசார்,

சம்பந்தப்பட்ட 6 பேரையும் பிடித்து, விசாரணை நடத்தி வந்தனர்.  இதில், 4 பேர் மைனர் எனக் கூறப்பட்டு வந்தது. ஆனால், தீவிர விசாரணையில், சிறுமியின் நெருங்கிய நண்பனாக இருந்த நபர் மட்டுமே, மைனர் என்றும், மற்ற அனைவரும் 19 வயதுக்கு மேலான நபர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, முதலில் 3 பேர் மீது மட்டுமே வழக்குப் பதிந்திருந்த போலீசார், தற்போது மேலும் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்துள்ளனர்.

இதன்படி, ஒரு பெண் உள்பட மொத்தம் 6 பேர் போலீசாரின் பிடியில் உள்ளனர். இவர்களில், ஒரு குற்றவாளி மட்டும், அந்த சிறுமியின் நெருங்கிய நண்பன் ஆவான். அவன், 15 வயதே ஆன மைனர் என்பதால், அவனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் போலீசார் சேர்த்தனர். எஞ்சிய குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, போலீஸ் காவலில் அடைக்கப்பட்டனர்.

குறிப்பாக, அந்த சிறுமிக்கு, கஞ்சா உபயோகிக்க பழக்கிக் கொடுத்து, இதன்பேரில் ஆசை வார்த்தை காட்டி மூளைச்சலவை செய்து, இத்தகைய கொடூரம் நிகழ காரணமாக இருந்தவர் ஒரு பெண் ஆவார். 13 வயது சிறுமியின் பலாத்காரத்திற்கு, ஒரு பெண்ணே உடந்தையாக இருந்த சம்பவம் மும்பையை அதிரச் செய்துள்ளது.