எல்லா தண்ணீரும் கடலுக்குப் போவுதே! கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்! இந்த லட்சணத்தில் நீர் மேலாண்மைக்காக இஸ்ரேல் போறாராம் எடப்பாடி!

கொஞ்சமாவது தண்ணீர் திறந்துவிடுங்கள் என்று கர்நாடகவைப் பார்த்து கெஞ்சிய காலம் போய், யாரும் எதுவும் சொல்லாமலே தண்ணீர் மேட்டூரை நோக்கி வந்துகொண்டே இருக்கிறது.


சரியான சேமிப்பு நடவடிக்கை இல்லை என்பதால் அத்தனை நீரும் வீணாக கடலுக்குப் போகிறது.இந்த விவகாரத்தில் தமிழக அரசை குற்றம் சாட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் முத்தரசன் இன்று காட்டமாக ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த எட்டு ஆண்டு காலமாக தண்ணீர் பற்றாக்குறையால் காவிரி பாசனப் பகுதிகளில் குறுவை சாகுபடி நடைபெறவில்லை.

ஒருபோக சம்பா சாகுபடியும் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. இதற்கு இயற்கை சீற்றங்கள் மட்டுமல்ல, செயற்கை இடர்பாடுகளும் காரணமாகும். இவ்வாண்டு ஆகஸ்ட் 13-ல் மேட்டூர் அணை பாசனத்திற்காக திறக்கப்பட்டு ஒருமாத காலம் ஆகி விட்டது.

மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றது. அணையில் இருந்து 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டும் இதுவரை கடை மடைப் பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை. சாகுபடி பணிகள் தொடங்கவில்லை. பாசன வடிகால்கள் தூர்வாரும் பணிகள் மற்றும் மராமத்து பணிகள் முழுமையாக நடைபெறவில்லை.

இப்பணிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு, சுயநல ஆதாயம் தேடும் நோக்கத்துடன் காலதாமதமாக தொடங்கி, ஒதுக்கப்படும் நிதியை பங்கிட்டு கொள்ள வழிவகை காணப்படுகின்றது. இதன் விளைவாக கடை மடை பகுதி வரை தண்ணீர் செல்லாமல் விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர். மறுபக்கம் எவ்வித பயன்பாடும் இன்றி தண்ணீர் கடலுக்கு செல்கின்ற கொடுமை நடந்து வருகின்றது. சென்ற ஆண்டு மட்டும் 227 டிஎம்சி தண்ணீர் கொள்ளிடம் வழியாக கடலுக்கு சென்று வீணானது என தெரிவிக்கப்படுகிறது.

காவிரி, வெண்ணாற்றில், கொள்ளிடத்தில் 10 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டினால் மட்டுமே மழைக்கால உபரி தண்ணீர் வீணாகாமல் சேமிக்க முடியும் என்பதை அறிந்திருந்தும் அஇஅதிமுக அரசு இதில் கவனம் செலுத்தவில்லை. இதனால் நடப்பாண்டிலும் தண்ணீர் வீணாகக் கடலில் கலப்பதை தடுக்க இயலாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

மேட்டூர் அணை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 28-ல் மூடப்படுவது வழக்கமாகும். இதனைத் தொடர்ந்து பிப்ரவரி முதல் மே வரையிலான காலங்களில் தூர்வாருதல் மற்றும் மராமத்து பணிகளை முழுமையாக செய்து முடிக்க முடியும். அவ்வாறு செய்யாமல் வேண்டுமென்றே ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கி பணிகளை அரைகுறையாக செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகின்ற முறைகேடாகும்.

இவ்வாண்டு மேற்கொண்ட பணிகள் அதற்காக ஒதுக்கப்பட்ட தொகை குறித்து, தமிழக அரசு பகிரங்கமாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென கேட்டுக் கொள்வதுடன், தண்ணீர் சேமிப்பு தடுப்பணைகள் கட்டுவதற்கான உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இந்த நிலையில் இருக்கும் தண்ணீரை சேமிக்க நினைக்காமல், நீர் மேலாண்மை குறித்து கற்றுக்கொள்ள எடப்பாடி இஸ்ரேல் செல்வது ஏன் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் ஸ்டாலின். நல்லா கேளுங்க சாரே... நீங்கள்ளாம் வெளிநாட்டுக்குப் போய் தமிழ்நாட்டை எப்படி செழிப்பா வெச்சிருந்தீங்க.