அமைச்சர் மணிகண்டனை வெளியேற்றியதும் அ.தி.மு.க.வில் ஏதேனும் சலசலப்பு ஏற்படும் என்று பலரும் பயந்தனர். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதால் எடப்பாடி இப்போது ஏக குஷியில் இருக்கிறார்.
விரைவில் 3 அமைச்சர்களின் பதவியை பறிக்கிறார் எடப்பாடி பழனிசாமி! கோட்டையிலே பரபரப்பு!

வெளிநாடு போய்வந்ததும் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்று பலருக்கும் வாக்கு கொடுத்திருந்தார் எடப்பாடி. அதன்படி இப்போது அவர் வந்ததும் அமைச்சர் பதவிக்கு ஆசைப்படுபவர்கள், அவரை மொய்க்கத் தொடங்கியுள்ளனர்.
அடுத்து மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையுமோ இல்லையோ, இன்னும் இருக்கக்கூடிய ஓர் ஆண்டுக்காவது நாங்கள் அமைச்சர்களாக இருக்கவேண்டும் என்று தோப்பு வெங்கடாசலம், ராஜன் செல்லப்பா, கே.வி.ராமலிங்கம், முன்னாள் டி.ஜி.பி.நட்ராஜ், செம்மலை, அலெக்ஸாண்டர், டி.நகர் சத்யா என்று பலரும் கேட்டு வருகிறார்கள்.
இவர்கள் ஆசையை நிறைவேற்றுவதற்கு எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கெனவே பாலகிருஷ்ண ரெட்டி, மணிகண்டன் ஆகியோர் வெளியேறிய காரணத்தால் இரண்டு அமைச்சர் பதவி காலியாக இருக்கிறது.
அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், அமைச்சர் துரைக்கண்ணு, அமைச்சர் ராஜலெட்சுமி, ஆகியோருடைய பதவி பறிக்கப்பட உள்ளதாம். இவர்கள் யாருக்குமே பெரிய தொண்டர்கள் பலம் இல்லை என்பதால், விரைவில் இவர்களுக்கு வழியனுப்பு விழா இருக்கும் என்று கோட்டை வட்டாரத்தில் பேசப்படுகிறது.