தி.மு.க.வில் உதயநிதிக்கு எதிராக கொதிக்கும் உ..பி.க்கள்... வாரிசு கொடுமைகளுக்கு முடிவே இல்லையா..?

வாரிசு அரசியல் என்றாலே அது திமுகதான் என தமிழக மக்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின், திடீரென திமுகவின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டது கட்சிக்குள்ளே கடும் எதிர்ப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. இருப்பினும், தேர்தல் நேரம் என்பதால் கட்சி நிர்வாகிகள் அமைதி காத்தனர்.


 ஆனால், இதையே தனக்கு சாதகமாக கருதிக்கொண்டார் மு.க. ஸ்டாலின். இதனையடுத்து உதயநிதியை அழைத்து மாவட்டங்களில் கூட்டம் நடத்துமாறு அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் உத்தரவுகள் பறந்தன. வேறு வழியின்றி அதையும் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில், திமுகவுக்குத் தேர்தல் உத்தி வகுப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் பிரசாந்த் கிஷோர், கட்சியில் உதயநிதிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்துக்கு ஆரம்பம் முதலே முட்டுக்கட்டைப் போட்டு வந்தார். அவர் சமீபத்தில் ஸ்டாலினிடம் அளித்த ரிப்போர்ட்டில்,உதயநிதிக்கு தலைமை முக்கியத்துவம் அளிப்பதாலேயே வேறு வழயில்லாமல், மற்ற நிர்வாகிகளும் அதனை பின்பற்றுகிறார்கள்.

ஆனால் கட்சியைத் தாண்டி திமுக அபிமானிகளிடமும், பொதுமக்களிடமும் உதயநிதிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது எனக் குறிப்பிடப்பட்டிருந்ததாம். இதனையடுத்தே, முப்பெரும் விழா மேடையில் உதயநிதியின் படத்தை வைக்க வேண்டாம்’ என்று மாவட்டச் செயலாளர்களுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் மற்ற கட்சி நிகழ்ச்சிகளில் உதயநிதி படம் தொடர்ந்து இடம்பெறத்தான் செய்கிறது.

இந்த நிலையில், அண்மையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த மு.க. ஸ்டாலின், உதயநிதிக்கு கட்சியில் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை நியாயப்படுத்தும் விதமாக ‘’ உதயநிதி ஒரேநாளில் வந்தவரல்ல. எப்படி மற்ற கட்சித் தோழர்கள், கட்சியில் இருக்கக்கூடிய நிர்வாகிகள், படிப்படியாக வளர்ந்து வந்து இன்றைக்கு ஒரு நல்ல நிலைமைக்கு வந்திருக்கிறார்களோ, அப்படித்தான் உதயநிதியும் வந்திருக்கிறார்’’ என கூறியுள்ளார்.

ஸ்டாலினின் இந்த கூற்று, கட்சிக்காக பல ஆண்டு காலம் ஓடாய் உழைத்து உரிய அங்கீகாரம் கிடைக்காமல் இருக்கும் நிர்வாகிகள் மத்தியில் மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.. பலரும் உதயநிதிக்கு எதிராக சீறி வருகின்றனர். பெயர் போடாமல் ஆடியோ வெளியிட்டு வருகிறார்கள்.

தேர்தல் நேரத்தில் இன்னும் என்னவெல்லாம் குழப்பம் வருமோ என்று ஆடிக்கிடக்கிறார்கள் தி.மு.க. பெரும்புள்ளிகள்.