வீடுகளுக்குள் புகுந்து வெளியே இழுத்து வந்து இரும்பு ராடால் அடி, உதை! தலித்துகளுக்கு நேர்ந்த பரிதாபம்! அதிர வைக்கும் காரணம்!

பெங்களூரு: ஆதிக்க சாதியினருக்கு அடிமை வேலை செய்ய மறுத்ததால் ஆத்திரமடைந்த சிலர் தலித் மக்களை அடித்து உதைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடகா மாநிலம், நீலமங்கலா அருகே உள்ள கச்சநல்லி கிராமத்தில், ஒக்கலிகா எனும் சாதியினர் உயர்ந்த சாதியாகவும், மடிகா சமூக மக்களை தாழ்த்தப்பட்ட நபர்களாகவும் பின்பற்றும் வழக்கம் உள்ளது. இந்நிலையில், ஒக்கலிகா சமூகத்தினர் வளர்க்கும் கால்நடைகள், வளர்ப்புப் பிராணிகள் உயிரிழந்தால், அவற்றை புதைப்பதற்காக, மடிகா மக்கள்தான் புதைகுழி தோண்ட வேண்டும்.

சமீபத்தில், இந்த வேலை செய்வதற்கு, மடிகா மக்கள் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதன்பேரில் ஆத்திரமடைந்த ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த 40 பேர், மடிகா மக்களை வீடு புகுந்து அடித்ததோடு, அவர்களை தலைமுடியை பிடித்து இழுத்துச் சென்று தெருவில் தள்ளி, கட்டைகள், இரும்புக் கம்பிகளால் அடித்து உதைத்தனர். இதில், 9 பேர் படுகாயமடைந்தனர்.  

படுகாயமடைந்த நபர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக, ஆதிக்க சாதி உணர்வை தப்பு என வலியுறுத்தி, அதன் தீமைகளை அப்பகுதி மக்களிடையே பரப்பும் பணிகளில் சமூக ஆர்வலர்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

இதன்மூலமாக, இரு தரப்பு மக்களையும் சுமூகமான மன நிலைக்கு மாற்ற முடியும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.