எடப்பாடியாரை தனியே சந்தித்துப் பேசிய மோடி..!- ஏக குஷியில் அதிமுக!

தமிழக அரசியல் வட்டாரத்தில் இப்போதைய ஹாட் டாபிக், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பிரதமர் மோடி தனியாக அழைத்துப் பேசியதுதான். இதன் மூலம் அதிமுகவிலும் தமிழகத்திலும் அசைக்க முடியாத சக்தியாக எடப்பாடி வளர்ந்திருப்பதை மோடி அனைவருக்கும் உணர்த்தி சென்று விட்டார் என்பதே அரசியல் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.


எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதா எப்படி காலத்தால் அடையாளம் காட்டப்பட்டு, அதிமுகவினராலும் தமிழக மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டாரோ அதேபோன்ற உயரத்தை இன்று எடப்பாடி எட்டியுள்ளார். இதில் சாமான்ய மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் எடப்பாடியை ஏற்றுக் கொண்டது பெரிய விஷயமில்லை. இன்றைய ஆண்ட்ராய்டு தலைமுறையினரையும் ட்விங்கிள் ’ட்விங்கள் லிட்டில் ஸ்டார்... எடப்பாடி எங்கள் சூப்பர் ஸ்டார்’ என பேனர் வைத்துக் கொண்டாடும் அளவுக்கு ஈர்த்ததுதான் எங்களையே ஆச்சர்யப்படுத்துகிறது’’ என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

இது தொடர்பாக எம்ஜிஆர் காலத்து சீனியர் அரசியல் விமர்சகர் ஒருவரிடம் பேசியபோது, ’’உண்மைதான்... இன்றைய துரோக அரசியலில் எடப்பாடி தாக்குப் பிடிப்பாரா என எல்லோரும் ஆரம்பத்தில் சற்று சந்தேகத்துடன்தான் பார்த்தார்கள்.

ஆனால், அதிருப்தியாளர்களை எல்லாம் அரவணைத்து, தனக்கு எதிராக பின்னப்பட்ட சதிவலைகளையும் முறியடித்து கட்சியையும் ஆட்சியையும் சிந்தாமல் சிதறாமல் காப்பாற்றிவிட்டார். இவை எல்லாவற்றிலுமே எடப்பாடியின் தேர்ந்த அனுபவமும், முதிர்ச்சியும் பளிச்சிட்டதை அதிமுகவினர் மட்டுமல்லாது, மற்ற கட்சியினருமே ஒப்புக்கொண்டுவிட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

இதன் வெளிப்பாடுதான், அண்மையில் சென்னை வந்த பிரதமர் மோடி, நேரு உள்விளையாட்டு அரங்கில், விழா நிறைவடைந்த பின் 15 நிமிடங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தனியாக அழைத்துப் பேசியது. இதை எடப்பாடியின் ஆளுமை மற்றும் திறமைக்கு கிடைத்த வெற்றியாகவும் பெருமையாகவும் கருதலாம்’’ என்றார்.

எடப்பாடிக்கு பிரதமரிடமிருந்து கிடைத்த பாராட்டு மற்றும் அங்கீகாரத்தைத் தொடர்ந்து அதிமுக வட்டாரத்தில் ஏக குஷி. ’எங்க தல... எங்க தல எடப்பாடி’’ என ஏக உற்சாகமாக பேசும் அவர்கள், அடுத்த ஆட்சியும் அதிமுக ஆட்சிதான் என ஏக நம்பிக்கையுடன் வளைய வருகிறார்கள்.