கேரளாவிலிருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர் ஒருவர் வயலில் நாற்று நடும் வீடியோவானது சமூக வலைத்தளங்களில் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.
வயலில் இறங்கி நாற்று நட்டு களை பறித்த பெண் எம்.பி! வைரல் வீடியோ!
கேரளா மாநிலத்தில் ஆலத்தூர் என்னும் தனித்தொகுதியுண்டு. இங்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரம்யா ஹரிதாஸ் வெற்றி பெற்று புதிய மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ரம்யா ஹரிதாஸ் காங்கிரஸ் கட்சியின் தாழ்த்தப்பட்ட பிரிவுகளின் நிர்வாகியாக பதவி வகித்து வந்தார். மேலும் குன்னமங்கலம் பகுதியின் பஞ்சாயத்து தலைவியாகவும் பொறுப்பு வகித்தவர்.
அப்போதிலிருந்தே இவர் அனைவரிடமும் எளிமையாகவும், அன்பாகவும் பழகக்கூடியவர். தன்னிடம் வந்து பேசுபவர்களின் கவலைகளையும், கஷ்டங்களையும் பொறுமையாக கேட்டு அவற்றை போக்குவதற்குரிய வழிமுறைகளை மேற்கொள்வார். இதனால் மனம் நெகிழ்ந்த ஆலத்தூர் தொகுதி மக்கள், இவரை "குட்டி சகோதரி" என்று அன்புடன் அழைக்கின்றனர்.
கிராமங்களுக்கு செல்லும் போது பொது மக்களின் வீட்டில் அமர்ந்து உணவு உண்பதும், அவர்களுடைய அன்றாட சிரமங்களைப் பற்றி கேட்டறிவதும் என பல நல்ல குணாதிசயங்களை பெற்றிருந்தார்.
தற்போது மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும் தன்னுடைய பழக்கவழக்கங்களை மாற்றி கொள்ளாமல் அதே எளிமையாக பணிபுரிந்து வருகிறார். தன்னுடைய ஓய்வு நேரங்களில் வயல்வெளிக்கு செல்லும் வழக்கமுடையவர்.
அவ்வாறு நேற்று வயல்வெளிக்கு சென்று இவர் நாற்று நட்ட வீடியோயொன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை கண்ட பெரும்பாலானோர் அவரை புகழ்ந்து வருகின்றனர்.
மேலும், இன்னும் பல்வேறு அரசியல் தலைவர்கள் இதுபோன்று விவசாயத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கின்றனர்.