குழந்தை சாப்பிடாமல் அடம் பிடிக்கிறதா..? கண் திருஷ்டி பட்டிருக்கலாம்... அதை கழிக்கும் வழி இதோ

சின்ன வயதில் பாட்டியோ அம்மாவோ நமக்கு கடுகு மிளகா உப்பு போன்றவற்றை நம்மை உட்காரவைத்து சுற்றி அடுப்பில் போடுவார்கள். ஊர்கண்ணே உலை வச்சிடுச்சு! இந்த மிளகா போல எரிஞ்சி போகட்டும் என்றோ அல்லது உப்பு போல கரைந்து போகட்டும் என்றோ சொல்வார்கள்.


உண்மையில் திருஷ்டி என்பது என்ன? த்ருஷ்டி என்பது சம்ஸ்கிருத சொல். தமிழில் கண். திருஷ்டி கழித்தலை தமிழர்கள் கண்ணேறு கழித்தல் என்று கூறுவார்கள். எல்லாருடைய பார்வையும் நல்லவையாக இருக்கும் என்று சொல்ல முடியாது. அவர்கள் எண்ணம் தீயதாக கூட இருக்கலாம் அல்லவா? அந்த தீயதை போக்கும் விதமாக பல்வேறு திருஷ்டி கழிக்கும் பழக்கங்கள் உள்ளது.

தாய் பத்து மாதம் சுமந்து பல்வேறு தியாகங்களை செய்து பிள்ளை பெறுகிறாள். அந்த பிள்ளை அழகாய் இருந்து விட்டாலோ எல்லோரும் அதை தூக்கி வைத்து கொண்டாடுவர். அத்தகைய பிள்ளைக்கு திருஷ்டி ஏற்படாமலா போகும். அதற்கு ஏற்படும் திருஷ்டிகளை போக்கும் முறைகளை பார்ப்போம்.

திருஷ்டி பொட்டு. பிறக்கும் குழந்தை எல்லாம் அழகுதான். அழகோ அழகுன்னு எல்லாரும் கொஞ்சறப்போ ஏற்படுற திருஷ்டிக்கு பரிகாரம் தான் கருப்பு திருஷ்டி பொட்டு. எளிமையான இது எல்லோராலும் செய்யக்கூடிய ஒன்று.நெற்றியிலும் கன்னத்திலும் இடப்படும் மைப்பொட்டு குழந்தையின் திருஷ்டியை போக்கும். கோயில்கள்ல தருகின்ற ஹோம ரட்சையை வைத்தால் இன்னும் கூடுதல் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை!.

குழந்தை பிறந்த பிறகு தலைக்கு ஊற்றும் நாட்களில் அல்லது மாலை வெளைகளில் சிறிதளவு ஆரத்தி கரைத்து அதில் குழந்தை கையில் உள்ள கறுப்புவளையலை கழற்றி போட்டு சுற்றிப்போடுதல் மரபு. இப்படி சுத்திப்போடுவதால் வளைய வரும் திருஷ்டிகள் வளையலோடு போய்விடுமாம்.

சாப்பிடாம அடம் பிடிக்கிறதுக்கு கண்திருஷ்டி கூட காரணமா இருக்கும்னு சொல்லுவாங்க! ஒருகைப்பிடி உப்பை எடுத்து கையை நல்லா மூடிகிட்டு தாய் மடியில குழந்தையை இருத்தி இடமிருந்து வலமா மூணுதடவையும் வலமிருந்து இடமா மூணு தடவையும்சுத்தி அப்படியே குழந்தையின் அம்மாவுக்கும் சுத்தி அந்த உப்பை தண்ணியில போட்டுடுங்க. தண்ணியில உப்பு கரையரா மாதிரி திருஷ்டி எல்லாம் கரைஞ்சி குழந்தை சாப்பிட ஆரம்பிக்கும்.

கொஞ்சம் பெரிதான குழந்தைங்களா இருந்தா கொஞ்சமா சாதம் வடிச்சி சிகப்பு மஞ்சள் வெள்ளை கலர்கள்ல அஞ்சு உருண்டைகள்செஞ்சி ஞாயிற்று கிழமைகள்ல மதியம் 12 மணிக்கு இதே மாதிரி சுத்தி வெவ்வேறு திசைகளில் எறிந்து விடலாம். அப்புறம் குழந்தையோட கை கால்களை கழுவிட்டு நாமும் கழுவிகிட்டு உள்ள வரலாம். இந்த பரிகாரம் திருஷ்டி எந்த திசையில் இருந்தாலும் விலகிப் போகசெய்யும்.

குழந்தைங்களுக்கு சோறூஊட்டிய பின் தட்டில் மிச்சமிருக்கும் சாப்பாட்டில் குழந்தையை கைகழுவ வைத்து அதை சுற்றி போடலாம். சாப்பிட போகும் முன் ஒரு உருண்டை சாதம் தட்டில் ஓரமாக எடுத்து வைத்து அந்த உணவை காகத்திற்கு போட செய்யுங்கள். இதுவும் ஒரு பரிகாரமே.

குழந்தை எதையாவது பார்த்து பயந்து திருஷ்டி பட்டு அதனால் சாப்பிடாமல் மெலிந்து போகும் அப்போது சிறிய குழந்தையாக இருந்தால் பூந்துடைப்ப குச்சியை கொளுத்தி திருஷ்டி சுத்தி போடுதல் பழக்கம். குழந்தையை தாயின்மடியில் அமரவைத்து பூந்துடைப்ப குச்சிகள் எட்டினைஎடுத்து பெருக்கும் பகுதி உள்ள முனைகளை பிடித்துக்கொண்டு மறுமுனையால் குழந்தையின் தலையை இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் மூன்று முறை சுற்றி பிறகு தலையில் இருந்து பாதம் வரை தொடுவது போல் தடவி வீட்டின் தென்கிழக்கு மூலையில் சாய்த்து வைத்து கொளுத்துங்கள் பட்பட்டென்று சத்தத்துடன் குச்சிகள் எரிந்து சாம்பலாக திருஷ்டியும் சாம்பலாகும்.

இதே ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளாக இருந்தால் சில பொருட்களை சேகரம் செய்து கொண்டு பரிகாரம் செய்யலாம். புதிய சட்டி ஒன்று, ஊமத்தங்காய், படிகாரம் தெருமண் , இவைகளை சேகரித்துக் கொண்டு பயந்த பிள்ளையை தெருவாசலில்கிழக்கு முகமாக நிறுத்தி மண்சட்டிக்குள் ஊமத்தங்காய், படிகாரம், தெருமண் இவை மூன்றையும் போட்டு மண்சட்டியை பயந்த பிள்ளையின் தலைக்கு இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் மூன்று முறை சுற்றி தலை முதல் பாதம் வரை இறக்கி அப்படியே எடுத்துச் சென்று முச்சந்திகள் கூடும் இடத்தில் போட்டு உடையுங்கள்.

கையோடு ஒரு துடைப்பம் எடுத்துச் சென்று ஓரமாக பெருக்கித் தள்ளுங்கள். இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் போகும். பின்னர் வீடு திரும்பி கைகால் கழுவி தலையில் சிறிது தண்ணீர் தெளித்துக் கொண்டு வீட்டிற்குள் நுழையவும் . பிள்ளையையும் அவ்வாறே செய்ய செய்து உள்ளே அழைத்துச் செல்லவும்.

கீழே விழுந்து அடிபட்டுக் கொண்டால் குழந்தை கீழே விழும் சமயம் நீங்கள் அங்கிருந்தால் கீழேகிடக்கும் செங்கள் துண்டு அல்லது மண்ணாங்கட்டியால் குழந்தையின் தலையை மும்முறை சுற்றி தூக்கி போட்டு உடைத்து திருஷ்டி கழிக்கலாம்.

திடீரென வரும் காய்ச்சல் திருஷ்டியால இருக்குமோ என்றால் குழந்தையை கரித்துண்டுகள் மீது நிற்க சொல்லி குழந்தையின் பாட்டி அம்மா சித்தி போன்ற பெண்மணிகள் மிளகாய் 7 சிறியதுண்டு படிகாரம் கொஞ்சம் உப்பு இவற்றை ஒரு அலுமினிய பாத்திரத்தில் போட்டு திருஷ்டி சுற்றவும். பின்னர் குழந்தையை நகரச் சொல்லி அந்தகரித்துண்டுகளையும் எடுத்து பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்வீட்டின் பின்புறம் கொட்டான்குச்சி அல்லது கரித்துண்டுகளை பற்ற வைத்து அதில் இந்த பொருட்களை போட்டு விடவும். பின்னர் பாத்திரத்தை கழுவி நீங்களும் கை கால் கழுவிக் கொண்டு உள்ளே வரவும்.

மாதம் ஒருமுறை மூன்று கண் கொட்டாங்கச்சி எடுத்து அதை அடுப்பில் பற்றவைத்து ஒரு தட்டில் வைத்து சுற்றி தெருவில் ஓரமாக போடலாம். படிகார கட்டியை கையில் எடுத்து சுற்றி அடுப்பு நெருப்பில் போட அது உப்பி வரும். அதை தெருவில் போட திருஷ்டி கழியும். இதைவிட எளிதான ஒரு முறை கற்பூரத்தை ஒரு தட்டில் ஏற்றி குழந்தைக்கு சுற்றி வாசலில் ஓரமாக போடுதல் இதனால் கற்பூரம் கரைவது போல திருஷ்டி கழியும் என்பது நம்பிக்கை.

இன்னும் சில வீடுகளில் கடுகுமிளகாய், உப்பு சிறிது தெருமண், தலைமுடி இவற்றி னை கையில் எடுத்துக் கொண்டு குழந்தையை உட்காரவைத்து ஊருகண்ணு, உறவு கண்ணு, நாய் கண்ணு, நரிக் கண்ணு, நோய்கண்ணு, நொள்ள கண்ணு கண்டக்கண்ணு, கள்ளக் கண்ணு, அந்த கண்ணு, இந்த கண்ணு எல்லாம் கண்ணும் கண்டபடி தொலையட்டும் கடுகு போல வெடிக்கட்டும் என்று இடமிருந்துவலமாகவும் வலமிருந்து இடமாகவும் சுற்றி அடுப்பில்போடுவார்கள்.

இதுவும் ஒரு எளிமையான திருஷ்டி பரிகாரமே!