வீட்டில் தாத்தாவுடன் உறங்கிக் கொண்டிருந்த பவித்ரா..! உள்ளே இருந்து அதிகாலையில் வந்த அலறல் சத்தம்! வேலூர் பரபரப்பு!

குடிசை வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இளம்பெண் உயிரிழந்த சம்பவமானது வேலூர் மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


வேலூர் மாவட்டத்தில் பேரணாம்பட்டு என்ற இடம் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட பொகலூர் கிடங்கு இராமாபுரம் கிராமத்தில் குப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் உஷா. இத்தம்பதியினருக்கு ராஜேஷ் என்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது மகனும், பவித்ரா என்ற 9-ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது மகளும் உள்ளனர்.

இருவரும் பல்லலகுப்பம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். குப்புசாமி மற்றும் உஷா பெங்களூருவில் பணியாற்றி வருகின்றனர். ஆதலால் பவித்ரா மற்றும் ராஜேஷ் பொகலூர் கிடங்கு ராமாபுரம் கிராமத்திலுள்ள தாத்தா தேவராஜன் வீட்டில் வசித்து வந்தனர்.

நேற்று முன்தினம் அதிகாலை கிராமத்தில் பேய் மழை பெய்து கொண்டிருந்தது. பவித்ரா தேவராஜ் மற்றும் அவருடைய மனைவி குடிசை வீட்டில் உறங்கி கொண்டிருந்தனர். ராஜேஷ் அதே பகுதியை சேர்ந்த தன்னுடைய மற்றொரு தாத்தா வீட்டில் உறங்கி கொண்டிருந்தார். மழையின் வீரியம் அதிகமானதால் துரதிருஷ்டவசமாக குடிசை வீட்டின் சுவர் இடிந்து கீழே விழுந்துள்ளது. 

இந்த விபத்தில் பவித்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இடர்பாடுகளில் சிக்கிய தேவராஜ் மற்றும் அவரது மனைவி வலியால் அலறியுள்ளனர். அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அப்பகுதி காவல்நிலையத்தில் தகவல் அளித்தனர் . தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் பவித்ராவின் உடலை மீட்டெடுத்து பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தேவராஜ் மற்றும் அவரது மனைவியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது