கொலைப் பசி! லேட்டாக உணவு எடுத்து வந்த வெயிட்டர்! கோபத்தில் சுட்டுக் கொன்ற வாடிக்கையாளர்! ஹோட்டலில் விபரீதம்!

உணவு தாமதமாக பரிமாறப்பட்டதால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் வெயிட்டரை சுட்டுக்கொன்றது பிரான்ஸ் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பிரான்ஸ் நாட்டில் "நாய்ஸி லீ கிரேண்ட்" ("Noisy Le Grand") எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு நிறைய உணவகங்கள் உள்ளன. நேற்று இப்பகுதியில் "பீட்சா மற்றும் சாண்ட்விச்" உணவகத்திற்கு வாடிக்கையாளர் ஒருவர் வந்துள்ளார். அங்கு அவர் சாண்ட்விச்சை ஆர்டர் செய்துள்ளார். ஆர்டரை எடுத்துக்கொண்ட வெயிட்டர் சான்விட்சை வழங்குவதற்கு வெகு நேரமாக்கியுள்ளார். 

உணவை எடுத்து வந்து கொடுத்த போதும் வாடிக்கையாளருக்கு கோபம் தீரவில்லை. அந்த வெயிட்டரை சரமாரியாக திட்டியுள்ளார். ஆத்திரம் தலைக்கேறியதால் செய்வதறியாது தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து வெயிட்டரை சுட்டுதள்ளியுள்ளார்.

சுட்ட உடனே வாடிக்கையாளர் உணவகத்தில் இருந்து மாயமானார். உணவகத்தில் இருந்தோர் குண்டடிபட்ட வெயிட்டரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இந்த நிகழ்வு குறித்த தகவலை உணவகத்தின் அப்பகுதி காவல்நிலையத்தில் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சிசிடிவி கேமரா பதிவுகளை கண்காணித்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவமானது பிரான்ஸ் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.