தமிழகத்தில் மீண்டும் மொழிப்போர் வெடிக்கும்! – சீமான் எச்சரிக்கை

மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியத்தால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழைக் கற்பதற்குக் கடும் விதிகளை மத்திய அரசு கொண்டு வந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று சீமான் ஆதங்கப்பட்டுள்ளார்.


ஒரு வகுப்பிலுள்ள 20 மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தமிழ் கற்பிக்கப்படும் எனவும், அதுவும் பகுதிநேர ஆசிரியர்தான் நியமிக்கப்படுவார் எனவும், வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும் எனவும் தமிழ் கற்பதற்கு பல தடைகளைக் கொண்டு வந்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. இது மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழ் மீதும், தமிழர் மீதும் கொண்டுள்ள விரோதப்போக்கை வெளிச்சமிட்டுக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.

விடுதலைபெற்ற இந்தியாவில், தமிழ்மொழிக்கு எதிரான நடவடிக்கைகளை மத்தியில் ஆளும் அரசுகள் தொடர்ந்து எடுத்து வந்ததுள்ளன. ஆனால், விடுதலைபெறுவதற்கு முன்பிருந்தே அந்நிய மொழி ஆதிக்கத்தைத் தமிழகம் எதிர்க்கத் தொடங்கி விட்டது. ஒவ்வொரு முறையும் தாய்த்தமிழுக்குத் தீங்கு நேரும் போதெல்லாம் தமிழகம் காட்டிய கடுமையான எதிர்வினையால் அவ்வப்போது மத்திய அரசு அடங்கிப்போனாலும், நீறுபூத்த நெருப்பாக கனன்று அவை மீண்டும் மீண்டும் தமிழர்களைச் சீண்டிப்பார்த்துக் கொண்டேயிருக்கின்றன. அதிலும், முந்தைய காங்கிரசு அரசைவிடப் பன்மடங்கு கூடுதலாகத் தமிழ்மொழி அழிப்பு வேலைகளில் நேரடியாகவும், மறைமுகவும் ஈடுபட்டுவருகிறது மோடி தலைமையிலான பாஜக அரசு.

இந்தி நாள் கொண்டாடக் கட்டாயப்படுத்துவது, சமஸ்கிருத வார விழா எடுக்க வற்புறுத்துவது, செம்மொழிகள் வளர்ச்சிக்கான நிதியில் தமிழைவிட சம்ஸ்கிருதத்திற்கு 20 மடங்கு அதிகமான நிதியினை ஒதுக்கீடு செய்வது, மும்மொழிக் கொள்கையை மறைமுகமாகத் தமிழகத்தில் திணிக்க முயல்வது, மத்திய அரசு அதிகாரிகள் மூலம் மொழித்திணிப்பையும், இன விரோதத்தையும் தமிழர்கள் மீது வெளிப்படுத்துவது, தமிழக அதிகாரிகளுக்கு இந்தி மொழியில் கடிதம் அனுப்புவது எனத் தமிழ்மொழியை இழிவுப்படுத்தும் மத்திய அரசின் செயல்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. அந்த வரிசையில் தற்போது தமிழ்நாட்டிலுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் படிக்கும் தமிழ் குழந்தைகள் தாய்மொழியான தமிழைக் கற்பதற்குக் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது மோடி அரசு. இவையெல்லாம் தமிழ்ப்பிள்ளைகள் தாய்மொழிக் கற்பதைத் தடுத்து அவர்கள் மீது இந்தி மற்றும் சம்ஸ்கிருதத்தைத் திணிக்க முனையும் மத்திய அரசின் சதிச்செயலன்றி வேறில்லை.

தமிழக அரசின் பாடத்திட்டத்தின் கீழ் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களிடம் மூன்றாவது மொழியாக இந்தியைக் கற்க விருப்பமா? என்ற கேள்வியைத் திட்டமிட்டு திணிக்கும் மத்திய அரசு, தமிழைக் கற்பிக்க மட்டும் மாணவர்களின் எண்ணிக்கையைக் கோருவது எவ்வகையில் நியாயமாகும்? எட்டாம் வகுப்பு வரை முழுக்க முழுக்கத் தாய்மொழி வழிக்கல்வி கற்பிக்கப்படுமெனப் புதிய கல்விக்கொள்கையில் அறிவித்த மத்திய அரசு, தற்போது கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தாய்மொழியான தமிழை ஒரு பாடமாகக் கற்பிக்கக்கூடக் கடும் நிபந்தனைகளை விதிப்பதும், அதுவும் ஆறாம் வகுப்பு முதலேதான் தமிழ் கற்பிக்கப்படும் என அறிவித்திருப்பதும் தற்சார்புப் பொருளாதாரக் கொள்கைபோல போல தாய்மொழிவழிக் கல்விக் கொள்கையும் மத்திய அரசின் மற்றுமொரு ஏமாற்றும் வேலை என்பதையே காட்டுகிறது. ஆனால், இதே கேந்திர வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருதம் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை கட்டாயப்பாடமாகவும், 9 ஆம்வகு்பபு முதல் 12 ஆம் வகுப்பு வரை விருப்ப பாடமாகவும் உள்ளது. இவையெல்லாம் மேடைக்கு மேடை திருக்குறளையும், தமிழின் பெருமையும் பிரதமர் மோடி பேசுவதெல்லாம் தமிழர்களை ஏமாற்ற நடத்தும் நாடகம் என்பதையே உணர்த்துகிறது.

ஏற்கனவே, ஐம்பதாண்டு கால திராவிடக் கட்சிகளின் ஆட்சியால் தமிழ்நாட்டில் தமிழ் மாணவர்கள் தமிழ் வழியில் பயிலாமலேயே பட்டப்படிப்புவரை படிக்கும் இழிநிலையுள்ளது. மேலும், அரசுப்பள்ளிகளில் தமிழ் வழியில் படித்துக்கொண்டிருந்த மாணவர்களிடமும் ஆங்கில வழிக்கல்வியைப் புகுத்தி தாய்மொழிக் வழிக்கல்வியே முற்றாக அற்றுபோகும் நிலைக்குத் தள்ளியுள்ளது. இந்நிலையில் எதிர்காலத்தில் தமிழர்கள், தமிழை ஒரு பாடமொழியாகக்கூடத் தமிழ்நாட்டில் படிக்க முடியாத ஒரு நிலையை உருவாக்க முயல்கிறது மத்திய அரசின் இந்த புதிய நிபந்தனைகள்.

ஆகவே, தமிழர்களின் பிறப்புரிமையான தாய்மொழிக் கல்வியைப் பெறுவதில் தடையை ஏற்படுத்தும் விதிகளை மத்திய அரசு உடனடியாகத் திரும்பபெற வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இல்லையெனில், தமிழர்களின் கடுமையான எதிர்ப்பினைச் சந்திக்க நேரிட்டு, தமிழகத்தில் மீண்டும் மொழிப்போர் வெடிக்குமென எச்சரிக்கை செய்துள்ளார்.