வீட்டிலேயே பாதுஷா செய்யுங்கள்! ஓமப்பொடி, மைசூர்பாக் செய்யவும் சிம்பிள் டிப்ஸ்!

சர்க்கரை அதிரசம் செய்வதற்கான மாவில் தண்ணீர் குறைந்து விட்டால் அதிரசம் கறுத்து விடும். இதற்கு ஒரு கப் மாவுக்கு முக்கால் கப் அளவு தண்ணீர் பாகு எடுத்தால் சரியாக வரும்.


காராசேவு மாவுடன் மிளகு சீரகத்தை ஒன்றிரண்டாக நுணுக்கிப் போடுவோம். புதினாவையும் பொடியாக நறுக்கி மாவுடன் சேர்த்து செய்தால் சுவை சூப்பராக இருக்கும். 

பாதுஷாவுக்கு மாவு பிசையும்போது மாவு 200 கிராம் என்றால் தண்ணீர் 300 கிராம் அளவு இருக்க வேண்டும். தண்ணீர் குறைந்தால் பாதுஷாவானது கல் போல் ஆகிவிடும். ஒரு கிலோ மைதாவுக்கு 350 கிராம் அளவு டால்டா அல்லது வெண்ணெய் சேர்த்து பிசைந்தால் பொரிக்கும்போது பாதுஷா மெத் என்று வரும். 

ஓமப் பொடி செய்ய ஓமத்தை அரைத்துச் சேர்க்க முடியாத பட்சத்தில் ஓமவாட்டர் சேர்த்தும் செய்யலாம். அல்வா, ஜிலேபி, கேசரி உள்ளிட்டவை செய்யும் போது நிறத்திற்காக புட் கலர் சேர்ப்போம். ஆனால் அதற்கு பதிலாக கேரட் சாறு எடுத்து சேர்த்தால் சுவை கூடும். நம் ஆரோக்கியத்திற்கும் நல்லது. 

சூடான நெய்யில் கடலை மாவை வறுத்து பாகுடன் சேர்த்து கிளறினால் மைசூர்பாகு கட்டி தட்டாமல் பதமாக வரும். * மைசூர் பாக்கினைச் சற்று புதுச் சுவையுடன் செய்ய, மாவு பிசையும்போது முந்திரியைப் பொடித்துச் சேர்த்தால் புதிய சுவையுடன் இருக்கும். 

முறுக்கு செய்யும்போது எண்ணையின் சூடு சரியாக உள்ளதா என்று சரி பார்க்க ஒரு சிறு துளி அளவுக்கு முறுக்கு மாவை கிள்ளி எண்ணெயில் போடவும். மாவு பொரிந்து மேலே வந்தால் அதுவே சரியான சூடு. 

எண்ணெயை சூடு செய்யும் போது பொங்கி வந்தால் சுண்டைக்காய் அளவு புளியை போட்டு பொரித்து எடுத்த பிறகு முறுக்கு பிழியவும். 

முறுக்கு வெண்மையாக வர, வறுத்து அரைத்த உளுந்து மாவை அரிசி மாவுடன் கலந்து செய்யவும். அரிசி மாவுடன் பொட்டுக்கடலை மாவு கலந்து செய்தால் முறுக்கு மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில் இருக்கும். கடலை மாவு கலந்து செய்தால் மஞ்சளாக இருக்கும். தவிர வெண்மையாகவும், காரமாகவும் முறுக்கு வேண்டுமென்றால் அரிசி மாவு உளுந்து மாவுடன் பச்சை மிளகாய் விழுது சேர்க்கவும். 

முறுக்கு சுடும் போது ஒரே சமயத்தில் இரண்டு அல்லது மூன்று கப் மாவிற்கு மேல் பிசைந்து வைக்க வேண்டாம். காரணம் இந்த மாவானது நேரம் ஆக ஆக எண்ணெய் குடிக்கும் 

மிக்ஸரில் உப்போ காரமோ அதிகமானால் சிறிது கெட்டி அவலைப் பொரித்துச் சேர்க்கலாம். தட்டையின் சுவையினைக் கூடுதலாக்க மாவு பிசையும்போது வறுத்த வேர்க்கடலையைச் சேர்த்து செய்ய சுவை கூடுதலாக இருக்கும். உங்கள் வீட்டில் எந்தச் சிறுதானிய பலகாரம் செய்தாலும் மாவுடன், சிறிது பொட்டுக் கடலை மாவையும் சேர்த்துப் பிசைந்தால், பலகரம் மிருதுவாக இருக்கும்.