சமையல் செய்யும் போது இதையெல்லாம் கட்டாயம் செய்யக்கூடாது!

சமையல் என்பது வெறும் வார்த்தை அல்ல, அது ஒரு கலை , அறிவியல், தவம். அதனால் தான் ஆயகலைகள் 64 இல் சமையலுக்கும் தனி இடம் கொடுத்தார்கள்.நம் முன்னோர்கள்.


சமைக்கும் உணவின் மனம், நிறம்,குணம், சுவை இதெல்லாம் சேர்ந்து ஒரு மனிதனின் மனநிலையை மாற்றி சாதிக்கவும் செய்ய முடியும். முடங்கி போக செய்ய முடியும். அதனால் தான் மனிதர்கள் சமையலுக்கு என்று வீட்டில் ஒரு தனி அறையையே உருவாக்கினார்கள். அந்தக்கால அரண்மனைகளில் சமையலுக்கென மிகப்பெரிய பகுதியை ஒதுக்கினர்.

இன்று சமையலில் எதை வேண்டுமானாலும் எப்படி செய்ய வேண்டும் என்று ஒரு நொடி google search இல் தெரிந்து கொள்ளலாம். ஆனால் எதையெல்லாம் சமையலில் செய்யக்கூடாது. எதை தவிர்க்கவேண்டும் என்பதை பற்றி பல வருட அனுபவத்தில் தான் கற்றுக் கொள்ள முடியும். அப்படி அனுபவித்து கற்றுக்கொண்டவர்களின் அனுபவங்களில் இருந்து சமையலில் செய்யக்கூடாத தவறுகள் பற்றிதான் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

* ரசம் தான் அந்தக்கால சூப் மிளகு கூடுதலாக போட்டு ஒரு கப் ரசம் குடித்தால் போதும் உடல் புத்துணர்வு பெறும். ரசத்தை சமைக்கும் போது அதை அதிகமாக கொதிக்க விடக்கூடாது.

* காபிக்கு எந்த காபி பொடி, சிக்கரி எவ்வளவு என்று யோசித்திருந்து கலந்தாலும் சில காபி ருசிக்காது அதற்கு காரணம் பால் நன்றாக காயந்து போய் கலந்திருப்பார்கள். பாலை அதிகம் காயவிடாமல் காபி தயாரித்தால் சுவை நா மயக்கும்.

* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.

* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது. கீரையில் அதிகமாக மசாலாவும் சேர்க்கக்கூடாது.

* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது. அதிக நேரம் வதக்கவும் கூடாது.

* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.

* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.

- இஞ்சியை எப்ப்பதும் தோலோடு சமைக்கக் கூடாது. கீரையோடு புளி சேர்க்கக் கூடாது.

- காய்கறிகளோ பழங்களோ சமைப்பதற்கும் / சாப்பிடுவதற்கும் வெகு நேரத்திற்கு முன்பே அதை நறுக்கி வைக்கக் கூடாது அதனால் அதன் உயிர்த்தன்மை இழந்து போகும்.

- மைக்ரோவ்வில் சமைப்பது தவிர்க்கப்பட வேண்டும்.மேலும் அதில் சமைக்கும் உணவுகளுக்கு பிளாஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்தக் கூடாது

* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.

* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.

* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.

* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.

* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.

- காய்கறிகளை நறுக்குவதற்கு முன், தண்ணீரில் நன்கு கழுவிய பிறகு நறுக்கவும். நறுக்குவதற்கு முன் ஊற வைப்பதோ, காய்களை நறுக்கிய பிறகு தண்ணீரில் கழுவுவதோ கூடாது.

- காய்கறிகளிலும் பழங்களிலும் தோலை ஒட்டித்தான் தாது உப்புக்களும், உயிர்ச்சத்துக்களும் நிறைந்திருக்கினறன. எனவே, முடிந்தவரை தோலுடன் சமைக்க வேண்டும்.

- கீரை வாங்கும்போது மஞ்சள் நிறமுள்ள இலைகள் அதிகமிருந்தால் வாங்குவதைத் தவிர்க்கவும். ஓட்டைகள் மற்றும் பூச்சிகளின் முட்டைகள் உள்ள கீரைகளையும் வாங்கக்கூடாது.

- எலுமிச்சை சாதம் செய்யும்போது தாளித்ததும் சாற்றை ஊற்றிக் கொதிக்கவிட்டால் சாதம் கசந்து போகும். அதற்கு பதில் ஒரு கிண்ணத்தில் எலுமிச்சைச் சாறு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்துகொள்ளவும். அதில் தாளித்ததை ஊற்றிக் கலக்கிய பிறகு, சாதத்தில் சேர்த்துக் கிளறினால், சாதம் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

இறுதியாக ஒரு விஷயம் சமையலில் உப்பை அதிகமாக சேர்த்து விடுவதோ, காரத்தை அளவு தெரியாமல் போட்டு விடுவதோ,தவறு அல்ல.அது அப்போதைய சமையலை மட்டுமே கெடுக்கும். ஆனால் அதையும் விட நமக்கு தவறு என்று தெரியாமல் வெறும் ருசிக்காகவும், அழகுக்காகவும் சில நிறமூட்டிகளையும் அதிகம் சேர்த்து விடுகிறோம். அதனால் நமது உடல் ஆரோக்கியமும் பாதிக்கிறது. ஆகவே உண்ணும் உணவு தரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டியது அவசியம்.