தேனிமலை முருகன் கோயில் மகிமை தெரியுமா? சித்தர்கள் பாறை வடிவில் ஆசி வழங்கும் திருத்தலம்!

திருக்கோயில் தரிசனம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தேனிமலை முருகன் கோயில்.திருச்சியில் இருந்து சுமார் 80 km தொலைவில் அமைந்துள்ளது.


செந்தமிழ் கடவுள் ஆறுமுகன் வேண்டி விரும்பி அருள்பாலிக்கும் மலைத் தலங்களில் வெகு முக்கியமான திருத்தலம் தேனிமலை. பொதுவாக தமிழகத்தில், பாரதத்தில் மலைகளை கடவுளரின் வடிவமாகவே நினைத்து வழிபடுவது நமது மரபு, பழக்கம். திருவண்ணாமலை, திருப்பதி என்று மலையே தெய்வமாக வழிபடுகிறோம்.

மலைகள் பல்வேறு தெய்வீக சூட்சுமங்களையும், தீர்க்கமுடியாத பல நோய்களை தீர்க்கும் சக்தி படைத்த மூலிகைகளையும் உள்ளடக்கியவைகளாக விளங்குகின்றன. இதன் காரணமாகவே சித்தர்கள் விரும்பி வாழும் இடங்களாக மலைகள் உள்ளன. இப்படி ஒவ்வொரு மலைத் தலத்திற்கும், சிறு பாறைகளுக்கும், சிறு குன்றுகளுக்கும், அவை தோன்றியதற்கான தெய்வீகக் காரணங்கள் பல உண்டு.

தேனிமலையின் முக்கியமான சிறப்பம்சங்களாக கருதப்படுபவை இங்குள்ள பாறைகளே. அக்காலத்தில் வாழ்ந்த யோகிகள் பலர் தம் தவ பலனால் பெரும் பாறைகளாக உருமாறியதாக சொல்லப்படுகிறது. செவ்வாய் கிரகத்தின் அதிபதியாக விளங்கும் ஸ்ரீ சுப்பிரமணியர், வள்ளி தேவயானை சமேத ஸ்ரீ முத்துக்குமாரசுவாமியாக வீற்றிருக்கும் தலம் தேனிமலை.

சித்தர்கள் நாம் அறியாத வடிவில் தவம் புரியும் அழகிய சிறிய மலைத்தலம். கந்தனின் சக்தி அளவற்று பெருக்கெடுத்து ஓடும் தலம். ஸ்ரீ பெருமானந்த சித்த சுவாமிகள் ஜீவாலயம் அமைந்த அதி அற்புத திருத்தலம். இயற்கை சுனைத் தீர்த்தம் தவழ்கின்ற இனிய தலம். பாறையிலிருந்து நீர் கசிந்து பெருக்கோடும் தலம். கங்கை, காவிரி, துங்கபத்ரா போன்ற புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய புண்ணியத்தை தேனிமலை தீர்த்தம் நமக்குத் தருகிறது.

இந்த தேனிமலைப் பாறைகள் பவள நிறத்தில் காட்சி தருகின்றன. இந்த தேனிமலையில், பலவிதமான பாறைகள் அமைந்துள்ளன. கொப்புப் பாறை, குடகுப் பாறை, சிரிகிரிப் பாறை, அருணோதயப் பாறை, தேவச் சந்திரப் பாறை, என்ற பெயர்களை உடைய அற்புத மூலிகை சக்திகள் நிறைந்த பாறைகள் காணப்படுகின்றன.

இந்த தேனிமலையில் அமைந்துள்ள ஒவ்வொரு பாறைக்கும் ஆறு விதமான குண நலன்கள் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதில் கொப்புப் பாறை குடம் போன்ற அமைப்புடனும், காற்று, வெய்யில், மழை போன்றவற்றிலிருந்து காக்கும் வண்ணம் நிழல் தரும் வகையிலும், உட்கார்ந்து இளைப்பாற நாற்காலி போன்ற அமைப்புடனும், மூலிகைப் நீர் சுரக்கும் பாறையாகவும், எனப் பல சிறப்பம்சங்களுடன் காணப்படுகிறது.

இந்தப் பாறையின் உள்ளே நீரோட்டம் உள்ளதாக சொல்கிறார்கள். நமது உடம்பில் காணப்படும் நரம்புகள் போல இந்தப் பாறையில் பல்வேறு கோடுகள் நரம்புகளைப் போல காணப்படுகின்றன. இவ்வாறாக இந்தப் பாறையில் இருந்து வரும் நீருக்கு பிருகு நீர் எனப் பெயர் உண்டு.

இந்தப் பிருகு நீர் பல மருத்துவ குணங்களைக் கொண்டதாகக் கருதப்படுகிறது. இந்தப் பாறையில் உள்ள மூலிகை, தண்ணீர், மணல், காற்று, அக்னி, ஒளி என எல்லாவற்றையும் கலந்த தண்ணீராக இது ஓடி வருவதால் பல்வேறு நோய்களை தீர்க்கும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த பாறையில் வாழும் தேனீக்கள் உற்பத்தி செய்யும் தேன் மிகுந்த மருத்துவ குணம் நிறைந்தது.

ஏனென்றால் பிருகுத் தண்ணீரை குடித்து வாழும் தேனீக்கள் இவை என்பதால். இந்தத் தேனிமலையில் பூசநாங்கண்ணி என்றொரு மூலிகை உள்ளது. இந்த மூலிகைச் செடியில் பட்டுத் தெளிக்கும் ஒரு துளி தண்ணீரில் கூட மருத்துவ குணங்கள் உள்ளன. அத்தனை சக்தி வாய்ந்த மூலிகை இது. இங்குள்ள சிரிகிரி பாறை சூரியன், சந்திரன் போன்ற கிரகங்களில் இருந்து வரும் ஒளிக் கதிர்களை பூமியில் வாழும் ஜீவராசிகள் தாங்கிக் கொள்ளும் அளவிற்கு மாற்றிக் கொடுக்கும் தன்மை உடைய பாறை.

முருகனைக் காண அந்த உச்சி வேளையில் வெறும் காலிலேயே, அந்த கருங்கற் பாறைகளில் ஏறிச் செல்ல எங்களால் முடிந்தது எவ்வாறு என்பது இப்போது புரிகிறது. இத்தகைய சிரிகிரிப் பாறைகளே இமய மலை அடிவாரத்தில் கிடைக்கப்பெறும் சாளக்ராமக் கற்களாக கண்டகி நதிப் படுகையில் கிடைப்பதாகச் சொல்லப் படுகிறது. இது போன்ற சிரிகிரிப் பாறை தரிசனங்களை தேனிமலை தவிர, திருவண்ணாமலை, இமயமலை, பர்வதமலை போன்ற மலைகளிலும் காண முடியும். மேலும், திருக்கழுக்குன்றம், பழனி, சங்கர மலை, திருப்போரூர் பிரணவ மலையிலும் காணலாம்.

திருவண்ணாமலையைப் போலவே தேனிமலையினைச் சுற்றிலும் பல்வேறு விதமான மலைகளின் தரிசனங்களைக் காணலாம். இங்குள்ள அருணோதயப் பாறையில் மலரும் ஒரு விதமான மூலிகையைக் கொண்டு கண் நோய்களை குணப்படுத்த முடியும் எனக் கூறப்படுகிறது. திருவண்ணாமலையை கிரிவலம் வருவது போல இந்த மலையையும் பலர் சுற்றிவந்து நல்ல பலன்களைப் பெற்று வருகின்றனர்.

ஒவ்வொரு மாத கார்த்திகை தினம், விசாகம், பரணி, அஸ்வினி போன்ற தினங்களிலும், பௌர்ணமி, செவ்வாய்க்கிழமை, தினமும் வருகின்ற செவ்வாய் ஹோரை நேரங்கள் என, கிரிவலம் வருவதற்கான நேரங்களில், நாட்களில் சுற்றிவர அளவிடற்கரிய நலன்களைப் பெறமுடியும் என்பது ஐதீகம்.

தேனிமலை ஸ்ரீ பெருமானந்த சித்த சுவாமிகள் இங்கு வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்த சித்தர் பெருமான். இந்தத் தேனிமலையில் காலணிகள் இல்லாமல் மேலே ஏறிச் செல்கையில் இங்குள்ள பாறைகளில் உட்புறம் படர்ந்து காணப்படும் தேவ நீரோட்டம் பாதங்களின் ரேகைகள் வழியாக நம் உடலில் சென்று சேர்கின்றன.

பூமியின் உள்ளும் புறமும் நிறைந்துள்ள சூட்சுமங்களை, தீர்த்தங்கள் (நீர்), பாறைகள் (நிலம்), வில்வ மரம், அரச மரம், ஆல மரம் போன்றவற்றில் உராய்ந்து வரும் (காற்று), சூரியன் சந்திரன் நட்சத்திரங்களில் இருந்து வரும் வெளிச்சம் (நெருப்பு), மலைப் பாறைகளின் உச்சிப் பகுதி (ஆகாயம்) என பஞ்ச பூதங்களின் சக்திகளை ஒருங்கிணைத்து ஜீவ ராசிகளுக்குத் தரும் உன்னதப் பணிகளையே சித்தர்கள் செய்து வருவதாக நம்பிக்கை நிலவுகிறது.

இது போன்ற திருக்கோயில்களுக்குச் செல்லும் போது இது போன்ற அனுபவம் நமக்குக் கிடைக்கும்.தேனிமலையை கிரிவலம் வந்து மலையேறி ஸ்ரீ முருகப் பெருமானை வழிபட்டு பின்னர், ஸ்ரீ பெருமானந்த சித்த சுவாமிகளுடைய ஜீவ சமாதியில் அடிப் பிரதட்சணம் செய்து, அவரது ஆசிகளை மனதாரப் பெற வேண்டும். பின்னர் அன்னதானம் செய்வது சிறப்பு. ஒரே நேரத்தில் தெய்வ தரிசனப் புண்ணியம், அன்னதானம் செய்த புண்ணியம் என நம் மனம் நிறையும். அன்னத்தால் பலரது வயிறும் நிறையும்

தமிழகத்தின் சிறப்புக்கள் எண்ணிலடங்காதவை. பொக்கிஷங்களாகக் கருதப்பட வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. அவற்றுள் ஒன்று தான் நம்மிடையே வாழ்ந்த, இன்னும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பதாக நம்பப்படுகின்ற சித்தர்கள், அவர்களது வாழ்க்கை முறைகள். சித்தர்களை நம்மால் காண முடியாவிட்டாலும் அவர்களது இருப்பிடங்களாக திகழ்கின்ற மலைகள் நம் கண்முன்னேயே இருந்து நமக்கு பல விதங்களில் நன்மைகளை தந்து கொண்டிருக்கின்றன.