ராகு காலத்தில் சுப காரியங்கள் ஏன் செய்யக்கூடாது? காரணம் இதோ!

வாரம் என்பது ஏழு நாட்களாகும். ரிஷிகள் ஏழு கிரகங்களுக்கும் ஏழு நாட்கள் தந்தார்கள்.


இதில் சாயா கிரகங்கள் எனும் நிழல் கிரகங்களான ராகு கேதுவுக்கு  நாட்கள் தரமுடியவில்லை. ஆகவே, ராகு கேதுக்கு ஒரு நாளின் 24 மணி நேரத்தில், ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி, ஏழு நாட்களுக்கும் பகிர்ந்தளித்தார்கள்.   

சர்ப்ப கிரகங்களான ராகுவும் கேதுவும், துர்க்கை தேவியை வழிபாடு செய்ததின் பயனாகவே கிரகங்களாகும் வரத்தைப் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. ஒரு நாளில் உள்ள இருபத்தி நான்கு மணி நேரத்தில் 1:30 மணி நேரம் ராகுவும், 1:30 மணி நேரம் கேதுவும் அம்பிகையை பூஜிக்கின்றனர்.

அதில் ராகு வழிபடும் நேரம் ராகு காலம் என்றும், கேது வழிபடும் நேரம் எமகண்டம் என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக மற்ற கிரகங்களின் ஆற்றல் அந்த நேரத்தில் குறைந்திருக்கும் என்பதால்தான், ராகு காலத்தில் சுப காரியங்களைத் தவிர்க்கச் சொன்னார்கள். 

ராகு காலத்தில் அம்மனை ஆராதிப்பது, குறிப்பாக சண்டிகையாகவும், துர்க்கையாகவும் தேவியை வணங்குவது சிறப்பான பலனைத் தரக் கூடியது. ராகு காலம் என்பது ஒவ்வொரு நாளிலும் குறிப்பிட்ட 1:30 மணி நேரமாகும். ராகு காலத்தில் செய்யப்படும் துர்க்கை பூஜை சிறப்பு மிக்கது. அதிலும் சிறப்பானது செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் செய்யப்படும் பூஜை. ஏனெனில் அந்த தினத்தில் ராகுவோடு இணைந்து செவ்வாயும் அம்பிகையை மங்கள சண்டிகையாக வணங்குவதே காரணம். 

மங்களன் என்ற பெயர், அங்காரகனாகிய செவ்வாய்க்கு உரியது. பொதுவாக ஒருவரது வாழ்வில் மங்கள காரியங்கள் நடப்பதற்கு செவ்வாய் மற்றும் சர்ப்ப தோஷங்களே காரணமாகச் சொல்லப்படுகின்றன.

செவ்வாய், ராகு ஆகிய கிரகங்களால் தோஷம் இருந்தாலோ அல்லது வாழ்வில் தடைகளும், துன்பங்களும் தொடர்ந்தாலோ ராகு கால வழிபாட்டினை மேற்கொண்டு, துர்க்கையையும் மங்கள சண்டிகையையும் வழிபடுவது நற்பலன்களை தரும். துர்க்கையை நோக்கியவாறு தீபம் ஏற்றுவது நல்லது. கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி தீபம் ஏற்றவேண்டும். 

ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் செய்யும் வழிபாட்டினால், தீராத நோய்களின் தாக்கம் குறையும். எதிரிகள் பயம் நீங்கும். பெற்றோருடன் ஒற்றுமை அதிகரிக்கும். வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் செய்யும் பூஜையால் குடும்ப பலம் சீராகும். தனிப்பட்ட வேண்டுதல்கள் பலன் தரும். மகப்பேறு கிட்டும். மனைவியைன் ஆயுள் பலம் கூடும். வாரிசுகளின் வாழ்வில் தடைகள் நீங்கும். பொன், பொருள் சேரும். வீண் செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும். 

செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையை வணங்கினால், திருமணத்தடை, முன்னேற்றத் தடை, கடன் பிரச்சனைகள், சகோதரர்களிடையே ஒற்றுமையின்மை, வீடு, மனை தொடர்பான பிரச்சனைகள், விபத்து பாதிப்புகள் ஆகியவை நீங்கச் செய்யும்.