பிரிந்துபோன உறவு ஒன்று சேர வேண்டுமா..? திருஞானசம்பந்தரால் புகழ்பெற்ற திருமருகல் கோயிலை தரிசனம் செய்யுங்க...

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 80ஆவது தலமாக விளங்குவது காவிரி தென்கரையில் உள்ள திருமருகல்.


மருகல் என்பது ஒருவகை கல்வாழையைக் குறிக்கும். இதை தலமரமாகக் கொண்டதால் இவ்வூர் திருமருகல் என்று பெயர் பெற்றது. கோச்செங்கட் சோழன் கட்டிய யானை ஏற முடியாத மாடக்கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.

இங்குள்ள இறைவன் மாணிக்கவண்ணர் இரத்தினகிரீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவியார் வண்டுவார் குழலி. பாம்பு கடித்து இறந்த செட்டி மகனை திருஞானசம்பந்தர் சடையாய் எனுமால் என்ற பதிகம் பாடி எழுப்பியருளிய தலம்.

பாண்டிய நாட்டு வணிகனாகிய தாமன் என்பவன் தன் மக்கள் எழுவரில் ஒருத்தியைத் தன் மருமகனான வணிகனுக்குக் கொடுப்பதாக வாக்களித்தான். ஆனால் வாக்களித்தபடி நடக்காமல் அவனுடைய பெண்களுக்கு பருவம் வந்த காலத்தில் ஒவ்வொருத்தியாகப் பிறருக்கு மணம் செய்து கொடுத்தான். அதனை உணர்ந்த ஏழாவது பெண் தாய் தந்தையர் அறியாமல் தன் மாமனோடு வெளியேறி பெரியவர்களின் எதிர்ப்பையும் மீறி திருமணம் புரிந்து கொள்ள முடிவு செய்தாள். இருவரும் திருமருகலை அடைந்து ஒரு திருமடத்தில் இரவு தங்கினர்.

அப்போது அப்பெண்ணின் மாமனை வினையின் காரணமாக பாம்பு தீண்டியது. அவன் இறந்தான். திருணம் ஆகாததால் வணிகனின் உடலைத் தீண்டமாட்டாளாய் தவித்தாள்.  இறைவன் மேல் தீராத பக்தி கொண்ட அந்தப் பெண் இறைவனை நோக்கி முறையிட்டு புலம்பினாள். சுவாமி தரிசனத்திற்காக அங்கு வந்த திருஞானசம்பந்த சுவாமிகள் திருவுள்ளத்தை இவள் அழுகை ஒலி அருள் சுரக்கச் செய்தது.  இளம் பெண்ணின் அழுகைக் குரலையும், அவளின் நிராதரவான நிலையையும் கண்டு இரக்கப்பட்ட திருஞானசம்பந்தர் இறைவன் மேல் பதிகம் பாட சுற்றிலும் உள்ளோர் அதிசயிக்கும் படி இறந்தவன் உயிர் பெற்று எழுந்தான். அதன் பிறகு அந்தப் பெண்ணிற்கும் அவனுக்கும் இறைவன் முன்னிலையில் சம்பந்தர் மணம் நடத்தி வாழ்த்தி அருளினார்.

திருமணமாகி ஏதேனும் காரணங்களால் பிரிந்து வாழும் தம்பதியர் இத்தலத்து இறைவனிடம் வேண்டிக் கொண்டு வழிபட்டால் பிரிந்தவர் கூடி வாழ்வர் என்பது நிச்சயம். திருமாலை விட்டுப் பிரிந்த மகாலட்சுமியும் இத்தலத்திற்கு வந்து வரலஷ்மி விரதமிருந்து சிவபெருமான் காட்சி கொடுத்து விமோசனம் பெற்ற தலம். தமிழ்நாட்டில் ஒரு சிவதலத்தில் இந்த அளவு மகாலஷ்மிக்கு சிறப்பு வழிபாடு அமைந்த கோயில் வேறு எதுவும் இல்லை.

இக்கோயிலில் நாள்தோறும் ஐந்து கால பூஜைகள் நடைபெறுகின்றன. சித்திரையில் பெருவிழா. இதில் ஆறாம் நாள் திருவிழா விடந்தீர்த்த ஐதிகமாகவும், ஏழாம் நாள் விழா செட்டி மகன், செட்டிப்பெண் திருக்கல்யாண உற்சவமாகவும் நடை பெறுகின்றன.

திருமணம் செய்யக் காத்திருப்போர் இத்தலம் சென்று இறைவனை வணங்கினால் எல்லா தடைகளும் நீங்கி இல்லற வாழ்வை இனிதே தொடங்கலாம் என்பது நிச்சயம்.