அவள் என் இதயத்தை திருடிவிட்டாள்! மீட்டு தாருங்கள்! போலீஸ் ஸ்டேசனுக்கு வந்த காதலனுக்கு நேர்ந்த கதி!

ஒரு பெண் தன் இதயத்தை திருடிவிட்டதாகவும் அதனை மீட்டுத்தருமாறு காவல் நிலையம் வந்த காதலனால் போலீசார் மண்டை குழம்பி போயுள்ளனர்.


   அண்மையில் நாக்பூரில் கொள்ளையர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 85 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்சசி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு நாக்பூர் காவல் ஆணையர் பூசன் குமார் உபாத்யாய் பொருட்களை ஒப்படைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பூசன் குமார் பேசினார். போலீஸ் மிகவும் சிரமப்பட்டு கொள்ளையர்களை பிடித்து பொருட்களை மீட்பதாக தெரிவித்தார்.

   ஆனால் சில சமயங்களில் தங்களுக்கும் தர்மசங்கடமான சூழல் ஏற்படுவதாக உபாத்யாய் தெரிவித்தார். அவர் கூறியதாவது: சில மாதங்களுக்கு முன்னர் நாக்பூர் காவல் நிலையத்திற்கு டிப் டாப்பாக இளைஞர் ஒருவர் வந்தார். பிரபலமான நிறுவனம் ஒன்றில் அந்த இளைஞர் உயர் பொறுப்பில் இருப்பதாக அறிமுகப்படுத்திக் கொண்டார். காணாமல் போன பொருளை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்று புகார் அளிக்க வந்திருப்பதாக அந்த இளைஞர் போலீசாரிடம் கூறியுள்ளார். சரி என்ன பொருளை காணவில்லை, எப்போது காணவில்லை என்று கேட்டுள்ளனர்.

   அதற்கு தன்னிடம் இருந்து திருடப்பட்ட பொருள் என்ன, யார் திருடியது, எப்போது திருடினார்கள் என்கிற விவரத்தை புகாராக எழுதியுள்ளதாகவும், அதனை பெற்று தான் தொலைத்ததை மீட்டுத் தருமாறு அந்த இளைஞர் கூறியுள்ளார். திருடனையும் யார் என்று தெரியும் என்கிற ரீதியில் பேசியதால் சரி,  எளிதாக பொருளை மீட்டு விடலாம் என்று போலீசார் அந்த புகாரை வாங்கி பார்த்தனர். பார்த்த அவர்களுக்கு அதிர்ச்சி.

   ஏனென்றால் அந்த டிப் டாப் இளைஞர் தொலைந்து போனதாக கூறிய பொருள் அவரது இதயம். மேலும் ஒரு பெண்ணின் பெயரை குறிப்பிட்டு அவர் தான் தன் இதயத்தை திருடியதாகவும் அந்த இளைஞர் கூறியுள்ளார். புகாரை பார்த்து குழம்பி போன போலீசார், இப்படி எல்லாம் புகார் அளிக்க முடியாது, இதயத்தை கண்டுபிடித்து தர சட்டத்தில் இடம் இல்லை என்று கூறியுள்ளனர். ஆனால் அந்த இளைஞர் தான் முறைப்படி புகார் கொடுத்துள்ளதாகவும் அந்த பெண்ணை அழைத்து அட்லீஸ்ட் விசாரித்தாவது தாங்கள் முடிவுக்கு வர வேண்டும் என்றும் மன்றாடியுள்ளார்.

   என்னடா இது பிரச்சனையாகிவிட்டது என்று நாக்பூர் காவல் நிலைய போலீசார் என்னை தொடர்பு கொண்டனர். வேறு வழியில்லாமல் நானும் சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் பிறகு இது போன்ற புகார்களை விசாரிக்க சட்டத்தில் இடம் இல்லை என்று பெரும்பாடு பட்டு அந்த இளைஞரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தோம். நாங்கள் கூறிய அறிவுரையை அந்த நபர் ஏற்றுக் கொண்டார். இப்படி எல்லாம் தங்களுக்கு பிரச்சனை வருவதாகவும், அனைத்தையும் தாங்கள் எதிர்கொள்வதாகவும், காவல் ஆணையர் உபாத்யாய் கூறினார்.

புகைப்படம்: மாடல்