ரேஞ்ச் ரோவர் காரும் ரியல் எஸ்டேட் தொழிலும்! பச்சைப் பொய்யை எப்படி கூறுகிறீர்கள் ஸ்டாலின்? ஓபிஎஸ் மகன் கேட்ட கேள்வி!

துணை முதலமைச்சர் ஓபிஎஸ் கவனித்து வரும் வீட்டு வசதித்துறை மற்றும் அவரது மகன்கள் ஓ.பி.ரவீந்திரநாத், ஜெயபிரதீப் மகள் கவிதா பானுவை தொடர்புபடுத்தி மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கைக்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.


ஓ.பன்னீர்செல்வத்தின் இளையமகன் ஜெயபிரதீப், தற்போது வீடியோ ஒன்றையும், 4 பக்க அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.அதில் கூறியிருப்பதாவது, ``தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு நான் ஒரு தகுந்த விளக்கத்தினை அளிக்க கடமைப்பட்டிருக்கிறேன். நானும், என் சகோதரரும், எங்களது வாழ்நாளில் அரசாங்கம் நேரடியாக சம்பந்தப்பட்ட எந்த ஒரு தொழில்களையும் இதுவரை நாங்கள் செய்ததில்லை. அதாவது, ஒப்பந்தப்புள்ளி கோரி அரசாங்கத்திடம் இருந்து பணம் வரும் எந்த தொழில்களையும் நாங்கள் செய்ததில்லை.

2001ம் வருடத்தில் இருந்து அ.தி.மு.க ஆட்சியில் இருக்கும் 15 ஆண்டுகளில். எங்களது மாவட்டமான தேனியிலும் சரி, சென்னையிலும் சரி, எந்த ஒரு அமைச்சர் பெருமக்களிடமோ, அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளிடமோ எங்கள் தந்தையில் பெயரை பயன்படுத்தி எங்கள் தொழில் சம்பந்தமாகவோ, அல்லது நண்பர்களுக்கான சிபாரிசோ கேட்டதில்லை. தொலைபேசியில் கூட நேரடியாக உரையாடியதில்லை. இதனை, கடந்தகால என் தந்தையிடம் பணியாற்றிய அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

கடந்த 18 வருடங்களாக நான், விவசாயம் சார்ந்த தொழிலும், சொந்தமாக இடம் வாங்கி, மக்கள் வசிக்கக்கூடிய வசதிகளை செய்து, பிளாட் போட்டு, சரியான முறையில் நகர ஊரமைப்புத்துறையினரின் ஆய்விற்கு பின்னர், அனுமதி வாங்கி விற்பனை செய்கிறேன். வசதிகள் செய்யாமல், அரசாங்கத்திடம் ஒப்புதல் வாங்கினால் தான் அதிகார துஷ்பிரயோகம். இது எங்கள் வாழ்வாதாரத் தொழில். இதில் எங்கு தவறு இருக்கிறது என எனக்குத் தெரியவில்லை. துணைமுதல்வர் கடந்த 2017ம் ஆண்டு தான் வீட்டுவசதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அதற்கு முன்பே 2016ம் ஆண்டு எனது நிலத்திற்கு முறைப்படி ஒப்புதல் வாங்கியுள்ளேன்.

இந்த கம்பெனியின் முகவரி அரசாங்கம் சம்பந்தப்பட்ட கட்டடத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதே மற்றொரு குற்றச்சாட்டு, என்னுடைய கம்பெனி, என் சொந்த கட்டடமான கிரீன்வேஸ் சாலையில் சல்மா கிரீன் கேஸ்டில் இரண்டாவது அடுக்குமாடியில் இயங்குகிறது. ஒருவரை தொடர்புகொள்வதற்கு கொடுத்த முகவரியை எங்களது கம்பெனி அந்த இடத்தில் தான் இயங்குகிறது என அப்பட்டமான பொய்யை எப்படி உங்களால் கூற முடிகிறது?

``நான் தொழில் ஆரம்பித்ததில் இருந்து என் தந்தை மீது உள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சியால், 15 ஆண்டுகளாக தங்கள் மூலமாகவும், தங்களின் நெருக்கமானவர்கள் மூலமாகவும் எவ்வளவோ தொந்தரவுகளை செய்துள்ளீர்கள்.நான் அதனை பொருட்படுத்தவில்லை. தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும், அவர்களின் தொழில்களையும் உதாரணப்படுத்தி என்னால் பேச முடியும். ஆனால், மற்றவர்களைப் பற்றி புறம்பேச நான் விரும்பவில்லை” என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதனையே வீடியோவாகவும் பேசி வெளியிட்டுள்ளார் ஜெயபிரதீப். அந்த வீடியோ, சமூக வலைதளங்களில், அ.தி.மு.க ஆதரவாளர்களால், வேகமாக பரப்பப்பட்டு வருகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெயபிரதீப் கூறியுள்ளார். அதே சமயம் ஜெயபிரதீப் குறிப்பிடும் நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்துள்ள சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புடைய ரேஞ்ச் ரோவர் காரை ஓபிஎஸ் பயன்படுத்தி வருகிறார். இந்த குற்றச்சாட்டு குறித்து ஜெயபிரதீப் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.