MGR வெறும் நடிகர் மட்டும் அல்ல! சிறந்த நிர்வாகியும் கூட!

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை நடிகராகத்தான் பலர் அறிவார்கள். அவர் அற்புதமான நிர்வாகியும்கூட என்பது உங்களுக்குத் தெரியுமா? இதோ அவரைப் பற்றிய சில சிறப்புத் தகவல்கள்…


அதிமுக உருவான வரலாறு :

1972 – ம் ஆண்டு அக்டோபர் 8 – ம் தேதியன்று. (பழைய) செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் பொதுக் கூட்டம் நடைப்பெற்றது. அதில் கலந்துகொண்டு எம்.ஜி.ஆர் பின்வருமாறு பேசினார்; 

அறிஞர் அண்ணாவின் பெயரால் ஆட்சியைக் கைப்பற்றி கலைஞரின் தலைமையில் செயல்படும் தி.மு.க. ஆட்சியில் லஞ்சமும் ஊழலும் பெருகிவிட்டன எனப்பொதுமக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது. இது நம்மையெல்லாம் வளர்த்து ஆளாக்கிவிட்ட அறஞர் அண்ணாவுக்கு நாம் செய்யும் கைம்மாறு ஆகாது.லஞ்சத்தை ஊழலையும் ஒழித்துச் சுத்தமான நல்லாட்சியை நடத்துவதுதான் அண்ணாவுக்குச் செய்கிற நன்றியாகும்; பெருமை ஆகும். 

கழகத் தலைவர்கள் அனைவரும் தங்கள் சொத்துக் கணக்கைப் பொதுமக்கள் முன்னால் சமர்பிக்க வேண்டும். கழகச் சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்றஉறுப்பினர்களும் தத்தமது சொத்துக்கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்வதுதான் லஞ்சத்தையும் ஊழலையும் ஒழிப்பதற்கு ஆரம்ப பணியாய்இருக்கும். 

அறிஞர் அண்ணாவே கைவிடத் துணியாத மது விலக்குக் கொள்கையை கைவிட்டது, கலைஞர் அரசு அண்ணாவுக்கு செய்த மிகப்பெரிய துரோகமாகும். அண்ணாவுக்குமட்டுமல்ல, தமிழக மக்களுக்கு இது மிகப்பெரிய துரோகமாகும்!” என்று எம்.ஜி.ஆர். முழக்கமிட்டார். லஞ்ச, ஊழல் இல்லாத ஆட்சி அமையவேண்டும் என்ற எம்.ஜி.ஆரின்எண்ணம்தான் அதிமுகவாக உருவெடுத்தது. 

அதிமுக வெற்றி அடைந்ததும், அண்ணாசாலையில் அமைக்கப்பட்ட பிரமாண்ட மேடையில் மக்களுக்கு முன் பதவியேற்பு வைபவத்தை நிகழ்த்தி புதுமை செய்தார்.தன் ஆட்சி லஞ்ச லாவண்மயற்ற ஊழலற்ற ஆட்சியாக மக்களாட்சி புரியும் என மக்களுக்கு உறுதியளித்தார். அதனை கடைசிவரை காப்பாற்றவும் செய்தார். 

1977 முதல் 1987 வரை எம்.ஜி.ஆர். ஆட்சி நடைபெற்றது. அப்போது அறம் சார்ந்த அரசியல் அரங்கேறியது. குடும்ப அரசியல் கிடையாது. கட்சிக்காரர்கள், நிர்வாகிகள்,அமைச்சர்கள் கண்காணிக்கப்பட்டதால் அச்சத்துடன் இருந்தனர். பதவி பறிக்கப்படலாம் என்பதால் தவறு செய்யப் பயந்தனர். 

அதிகாரிகளுக்கு முழு அதிகாரம் இருந்தது. எவரேனும் ஆளுமை செலுத்த முயன்றால் கார்டனுக்கு சொல்லிவிடுவோம் என்று சொல்லும் அளவுக்கு அதிகாரிகள் சுதந்திரமாகப் பணியாற்றினார்கள். 

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் தேவன் என்றாலும் விட மாட்டேன் என்று சொல்லியதைப் போலவே தவறு செய்தவர்களை தண்டித்தார்., பதவிகளில்இருந்து தூக்கினார். ஆனால், எம்.ஜி.ஆர். ஆட்சிக்குப் பிறகு லஞ்சத்தில் பேரம் பேசுவது, பங்கு போடுவது, எல்லை பிரிப்பது போன்ற முறைகேடுகள் நிகழ்ந்தது கண்கூடு. 

மக்கள் நலன் 

நாடோடி மன்னன் திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்திய மக்களாட்சியை, தனது ஆட்சியில் கொடுத்தார். தேச நலனைவிட மக்கள் நலனுக்கு அதிகமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ‘நானே போடப்போறேன் சட்டம், நன்மை பயக்கும் திட்டம்’ என்று சொன்னதைப் போலவே, ஒவ்வொரு திட்டத்திலும் மக்கள் நலன்முன்னிறுத்தப்பட்டது.

பசிப்பிணியை உணர்ந்தவர் எம்.ஜி.ஆர். அதனால் குழந்தைகள் யாரும் பசியால் வாடக்கூடாது என்று சத்துணவுத் திட்டம் கொண்டுவந்தார். இந்த திட்டம்தான்தமிழகத்தின் கல்வித்தகுதியை வானளவுக்கு உயர்த்தியுள்ளது.. சத்துணவுத்திட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயாக்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதனால்ஆயிரக்கணக்கான குடும்பத்தில் வறுமை விலகியது. ரேஷன் கடைகளில் அரிசி விற்பனையை சீர்படுத்தினார். அரிசி விலையை 1.75 ரூபாய்க்கு கட்டுப்படுத்தினார்.ரேசன் கடையில் பொருட்கள் கிடைப்பதில் சிரமம் இருப்பதை உணர்ந்த எம்.ஜி.ஆர். தமிழ்நாடெங்கும் 20 ஆயிரம் ரேஷன் கடைகளைத் திறந்து 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார். அதனால்தான் என்றென்றும் ஏழைகள் இதயத்தில் எம்.ஜி.ஆர். வாழ்ந்தார். 

ஒரு விளக்குத் திட்டம் எம்.ஜி.ஆரால் கொண்டுவரப்பட்டது. குடிசையில் வாழும் மக்களும் மின்சாரம் பெறவேண்டும் என்பதற்காக ஒவ்வொரு குடிசைக்கும் ஒரு இலவசமின்சார விளக்கு பொருத்துவதை லட்சியமாகக் கொண்டு செயல்பட்டார். இதுவே பின்னர் இருவிளக்கு திட்டமாக மாற்றம் அடைந்தது. 

பள்ளி மாணவர்களுக்கு படிப்பில் எந்த சிரமமும் ஏற்படக்கூடாது என்பதில் எம்.ஜி.ஆர். உறுதியாக இருந்தார். அதனால் இலவச சீருடை, இலவச பாடப்புத்தகம், இலவசகாலனி, இலவசபற்பொடி என்று ஏகப்பட்ட உதவிகள் செய்து படிக்கவைப்பதில் அக்கறை செலுத்தினார். 

முதியோர் மீது எம்.ஜி.ஆருக்கு உள்ள அக்கறை அளப்பரியது. அதனால் முதியோருக்கு நாள்தோறும் மதிய உணவு, ஆண்டுக்கு இரண்டு முறை இலவச உடை, மாதஉதவித்தொகை போன்றவற்றை வழங்கி, ஒவ்வொரு வீட்டுக்கும் தலைமகனாக எம்.ஜி.ஆர். விளங்கினார். விவசாயிகள், நெசவாளர்களுக்கு கடன் தள்ளுபடி, இலவசமின்சாரம், பயிர் பாதுகாப்பு, விதை மானியம் போன்றவையும் புரட்சித்தலைவரால் அறிமுகம் செய்யப்பட்டது. 

படித்து வேலையில்லாத இளைஞருக்கு ஊக்கத்தொகை எம்.ஜி.ஆர். காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. வீட்டுக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கவேண்டும்என்பதை எம்.ஜி.ஆர். லட்சியமாகக் கொண்டிருந்தார். இதற்காகவே மாதம் 9,000 வருமானத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை என்று சட்டம் போட்டார்.ஆனால், இதற்கு கடுமையாக எதிர்ப்பு தோன்றவே, மக்கள் உணர்வுகளுக்கு மதிப்புகொடுத்து சட்டத்தை வாபஸ் பெற்றார். 

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 31% என்ற அளவில் இருந்த இட ஒதுக்கீட்டை 50% என உயர்த்தியவர் புரட்சித்தலைவர். இட ஒதுக்கீடு 50%க்குள் இருக்க வேண்டும் என்றுவரையறை செய்திருந்தபோதும், மக்கள் தொகை கணக்கிட்டு 50% பிற்படுத்தப்பட்டோர், 18% தாழ்த்தப்பட்டோர் என 68% இட ஒதுக்கீடு கொண்டுவர காரணமாகஇருந்தார். இதனை பின்னர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி சட்டபூர்வமாகக் கொண்டுவந்தார். 

மக்கள் மனம் அறிந்தவர் 

எம்.ஜி.ஆர். காலத்தில் 41 கிளாஸ் என்ற சந்தேக கேஸ் போடும் சட்டம் ஒன்று நடைமுறையில் இருந்தது. அதன்படி சைக்கிளில் டபுள்ஸ் செல்பவர்களை மடக்கி கை ரேகைபதிந்து, ரிமாண்ட் செய்துவந்தனர். இதனால் கிராமத்து ஏழைகள்தான் பாதிக்கப்பட்டனர். கணவனுடன் மனைவி சைக்கிளில் செல்ல முடியவில்லை, அப்பாவுடன் மகன்சைக்கிளில் செல்ல முடியவில்லை. இந்த சட்டத்தை நீக்கினார் புரட்சித்தலைவர். இதனால் ஏழைகளுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை வார்த்தைகளால் வடிக்கவே முடியாது.

தமிழர் நலன் பாராட்டுவதில் எம்.ஜி.ஆரை எவரும் விஞ்சமுடியாது. ஈழத்தில் விடுதலைப்புலிகள் வலிமை பெறவும், வளர்ச்சி அடையவும் எம்.ஜி.ஆர். செய்த உதவிகள்ஏராளம். அதனால்தான் உலகமெங்கும் இருக்கும் ஈழத்தமிழர்கள் வீட்டில் இன்றும் எம்.ஜி.ஆர். படம் தொங்குகிறது. பிரபாகரனுக்குக் கொடுக்கும் மரியாதையைஎம்.ஜி.ஆருக்குக் கொடுத்தனர். தமிழ் ஈழம் உருவாகவேண்டும் என்பதற்காக எதையும் செய்துகொடுக்கும் துணிச்சல்காரராக எம்.ஜி.ஆர். இருந்தார். 

காரியம் சாதிப்பதில் வல்லவர் 

பல அரசுகளால் பேசப்பட்டுவந்த கிருஷ்ணா நதிநீர் இணைப்பை சாத்தியமாக்கியவர் எம்.ஜி.ஆர். சாதுர்யமாக என்.டி.ராமாராவுடன் பேசி ஒப்பந்தம் போட்டு காரியம்சாதித்தார். ரேஷன் அரிசி தருவதில் மத்திய அரசு சுணக்கம் காட்டுவது தெரிந்ததும் 1983-ம் ஆண்டு மெரினா பீச்சில் உண்ணாவிரதம் இருந்து காரியத்தை சாதித்தார்.

விமர்சனங்களை மதிப்பவர் 

மதுவை தமிழகத்தில் இருந்து ஒழித்துக்கட்ட வேண்டும் என்று எம்.ஜி.ஆர். கடுமையான சட்டங்களைக் கொண்டுவந்தார் முதல் முறை மதுவிலக்கு சட்டத்தில் பிடிபட்டால்3 ஆண்டுகள் சிறைத் தண்டனை… இரண்டாவது முறை பிடிபட்டால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, மூன்றாவது முறை பிடிபட்டால் நாடு கடத்தப்படுவார்கள் என்றுஅவசர சட்டம் கொண்டுவந்தார். ஆனால் மக்களும் எதிர்க்கட்சிகளும் இந்த சட்டத்தைக் கடுமையாக எதிர்த்ததால் மதுவிலக்கை ரத்து செய்தார்.

தனியார்களுக்கு கல்லூரி வழங்கியபோது கடுமையான விமர்சனம் எழுந்தது. ஆனால் எதிர்காலத்தில் தமிழர் நலனுக்கு இதுதான் சரியான திட்டம் என்பதில் உறுதியாகஇருந்தார். அவர் தீர்க்கதரிசனம் இன்று உண்மையாகிவிட்டது. உலகம் முழுவதும் ஐ.டி. துறையில் தமிழர்கள் சாதனை புரிந்து வெற்றிகரமாகத் திகழ்வதற்குக் காரணம்இந்த தனியார் பொறியியல் கல்லூரிகள்தான்.