அதிகாலையில் எழுந்து வீதி வீதியாக சென்ற மு.க.ஸ்டாலின்...! பரபரத்த சென்னை சைதாப்பேட்டை..!

'பத்திரிகைச் செய்தி - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சைதாப்பேட்டை தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு உதவி வழங்கினார்'


இன்று (08-04-2020) காலை, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வி.வி.கோயில் தெரு, வி.எஸ்.முதலி தெரு, சுப்ரமணிய கோயில் தெரு பஜார் ரோடு ஆகிய பகுதிகளில் 'கொரோனா ஊரடங்கு' குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வி.வி.கோயில் தெருவில் உள்ள பால் கடை, வி.எஸ்.முதலி தெருவில் உள்ள மளிகை கடை ஆகிய இடங்களுக்கு சென்ற அவர், அத்தியாவசியப் பொருட்களான பால் மற்றும் மளிகை பொருட்கள் தடையின்றி கிடைக்கிறதா, அரசு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே கடைகள் செயல்படுகிறதா என்பது குறித்து விசாரித்தறிந்தார். அதோடு, அங்கிருந்த பொதுமக்களிடம், பொருட்களை வாங்க வீட்டை வெளியே வரும்போது கட்டாயம் 'தனிமனித இடைவெளியை' பின்பற்ற வேண்டும் என வலியுறுத்திய அவர், பொருட்களின் விலையேற்றம் குறித்தும் விசாரித்தறிந்தார்.

பின்னர், சுப்ரமணிய கோயில் தெரு பஜார் ரோடு பகுதியில், கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள 500 மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை 'டிசம்பர் 3 இயக்கத்தின்' மூலம் அவர்களது வீடுகளில் வழங்கிட, அதன் மாநிலத் தலைவர் பேரா.தீபக் அவர்களிடம் ஒப்படைத்தார்.