குழந்தைகள் கனவு காணுமா - தாய்ப்பாலும் அலர்ஜி ஆகும் தெரியுமா

தூக்கத்தில் குழந்தை சிரிப்பதை பார்க்கமுடியும். கடவுள் குழந்தையுடன் விளையாடுகிறார் என்று பெரியவர்கள் சொல்வதுண்டு. பெரியோர்களைப் போன்றே குழந்தைகளும் கனவு காண்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.



·        கண்கள் முழுமையாக வளர்ச்சி அடைந்தவுடனே கனவுகள் தோன்றுகின்றன. அதனால் கருவில் சிசுவாக இருக்கும்போதே குழந்தைகள் கனவு காண்கின்றன.

·         பச்சிளங் குழந்தையாக இருக்கும்போது பெரும்பாலும் நல்ல கனவுகளே குழந்தைக்கு வருகின்றன.

·         தாயின் அரவணைப்பு கிடைக்காத நிலை, அதிக சத்தத்துக்கு இடையே வாழும் குழந்தைகளுக்கு மட்டும் கெட்ட கனவுகள் வருகின்றனவாம்.

·         பெரும்பாலும் பிறந்த 16 வாரங்களுக்குப் பிறகே கெட்ட கனவுகள் தோன்றுவதாக மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

குழந்தைக்கு நல்ல கனவு தோன்றுவதற்கு பெற்றோரின் அன்பும், அரவணைப்பும் அவசியம். குழந்தையை சுற்றிய சூழலும் இனிமையான முறையில் இருந்தால் சந்தோஷமான கனவுகள் காண்பதற்கு உதவ முடியும்.


1.     தாய்ப்பாலும் அலர்ஜி ஆகும் தெரியுமா?

இந்த உலகத்திலேயே குழந்தைக்கு மிகவும் பாதுகாப்பான உணவாக தாய்ப்பாலை சொல்கிறோம். ஆனால், தாய்ப்பாலும் சில நேரங்களில் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம் என்பதை இளம் தாய்மார்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

·         மார்பகத்தில் க்ரீம், பவுடர், சோப்பு போன்றவை தங்கியிருக்கும்போது, சுவைத்துக் குடிக்கும் குழந்தைக்கு அலர்ஜியை உண்டாக்கும்.

·         அலர்ஜியை உண்டாக்கும் சில உணவுகளை தாய் உட்கொள்ளும்போது, அது பாலில் கலந்து குழந்தைக்குச் சென்று பாதிப்பை உண்டாக்கலாம்.

·         பூண்டு அதிகம் எடுத்துக்கொள்வதால் உண்டாகும் வாசனை குழந்தைக்கு ஏற்கவில்லை என்றால் நிறுத்திவிட வேண்டும்.

·         அதிக காரம், எண்ணெய் பலகாரங்கள் அதிகம் தாய் சாப்பிடும்போது, இந்த உணவின் வீரியத்தை பால் குடிக்கும் குழந்தையும் அனுபவிக்கவே செய்யும்.

அதனால் பாலூட்டம் காலம் வரையிலும் குழந்தைக்கு எந்த உணவு நல்ல உணவு என்பதை தேடிக்கண்டுபிடித்து, அவற்றை மட்டுமே தாய் உட்கொள்ள வேண்டும். உணவில் போதிய ஊட்டச்சத்துக்களும் நிச்சயம் நிறைந்திருக்க வேண்டும்.