எலிகளின் ஸ்பரிசம் பட்டால் போதும்! நடப்பது எல்லாம் நல்லது தான்! அதிசய கோவில்! எங்குள்ளது தெரியுமா?

ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் மாவட்டத்தில் உள்ளது தேஷ்னோக் என்ற கிராமம்.


இங்கு கர்ணி மாதா கோவில் இருக்கிறது. இந்த அம்மன் துர்க்கையின் அவதாரம் என்று கருதப்படுகிறது. கர்ணி மாதா ஆலயம் என்பதை விடஎலிகளின் ஆலயம்என்ற பெயரே இந்த ஆலயத்தை பிரசித்திப் பெற்றதாக விளங்கச் செய்துள்ளது. இந்த ஆலயத்தில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எலிகள் இருப்பதே இதற்குக் காரணம்.

மத்திய மற்றும் மேற்கிந்திய பகுதி மக்களின் ஆன்மிகச் சுற்றுலாத் தலங்களில் இந்த ஆலயம் முதலிடம் பிடிக் கிறது. சலவைக் கற்களால் ஆன இந்த ஆலயத்தை பிகானேர் பகுதியை ஆட்சி செய்தகங்கா சிங்என்ற மன்னர் கட்டியதாக கூறப்படுகிறது. இந்த ஆலயத்தின் கட்டிட அமைப்பானது முகலாய கட்டிடக்கலை மற்றும் ராஜபுத்திரக் கட்டிடக் கலையுடன் கூடியதாக இருக்கிறது.

இந்து மத ஐதீகப்படி ஒரு பிறவியின் முடிவு என்பது, அடுத்தப் பிறவின் தொடக்கமாக பார்க்கப்படுகிறது. கர்ணி மாதா ஆலயம், கபாஸ் எனப்படும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எலிகளுக்கு வாழ்விடமாக திகழ்ந்து வருகிறது. இந்த எலிகள் அனைத்தும் கர்ணி மாதாவின் எதிர்கால குழந்தைகளின் ஆன்மாக்களை சுமந்து திரிவதாக இந்தப் பகுதி மக்கள் நம்புகிறார்கள். ஆலயங்களுக்கு வரும் பக்தர்கள் ஆலயத்திற்குள் சிறிய குகை போல் அமைந்த இடத்தில் வீற்றிருக்கும் கர்ணி மாதாவை முதலில் வழிபடுகின்றனர்.

இந்த அன்னையின் மூலவர் சிலை 75 செ.மீ. உயரமே இருக்கிறது. இந்த சிலையானது ஜெய்சல்மர் மற்றும் ஜோத்பூரில் கிடைக்கும் ஒரு வகை சிவப்புக் கல்லில் வடிக்கப்பட்டுள்ளது. தலையில் கிரீடம், வலது கையில் சூலம், இடது கையில் கபாலம், பின் புறம் சிம்ம வாகனம் என துர்க்கையின் கோலத்தில் கர்ணி மாதா காட்சி தருகிறார். இவரது விக்கிரகம் குங்குமத்தால் மூடப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது. இந்த விக்ரகத்தின் முன்பாக பெரிய தட்டில் லட்டு பிரசாதங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனை ஏராளமான எலிகள், பக்தர்களின் கூட்டத்தை சிறிதும் கண்டுகொள்ளாமல் கொறித்துக் கொண்டிருக்கின்றன.

கர்ணி மாதாவிற்கு அடுத்தபடியாக பக்தர்கள் வழிபடுவது இந்த எலிகளைத்தான். அவர்கள் தங்களோடு, தங்கள் கிராமத்தில் வாழும் சக குடிமக்களாகவே இந்த எலிகளை கருதுகின்றனர். அந்த எலிகளுக்கு பால், இனிப்பு பொருட்களை வைத்து வழிபாடு செய்கிறார்கள். பெரும்பாலான எலிகள் கருப்பு நிறம்தான், ஒரு சில வெள்ளை எலிகளும் தென்படுகின்றன. வெள்ளை எலிகளை கண்ணால் கண்டால், அதிர்ஷ்டம் வந்து சேரும் என்பதும் ஒரு நம்பிக்கையாக நிலவுகிறது. இங்கு ஒரு அதிசயம் என்னவென்றால் எலிகள் அனைத்தும் ஒரே அளவிலான தோற்றம் கொண்டவையாகவே காணப்படுகின்றன. குட்டி எலிகள் ஒன்றைக் கூட காண முடிவதில்லை. இவை இனப்பெருக்கம் செய்கின்றனவா? அப்படியானால் குட்டி எலிகள் ஒன்றுகூடவா தென்படாமல் போய்விடும்? என்பது பக்தர்களின் ஆச்சரியக் கேள்வியாக இருக்கிறது.

இங்குள்ள எலிகள் அனைத்தும் புனிதமாக கருதப்படுவதால், பக்தர்கள் இந்த எலிகளிடம் மிகுந்த மரியாதை கொண்டுள்ளனர். யாராவது தெரியாமல் எலிகளை மிதித்து விட்டால், வெள்ளியால் செய்யப்பட்ட எலியின் உருவத்தை வாங்கி வைத்து வழிபட்டு பரிகாரம் செய்து கொள்கின்றனர். இந்த எலிகளின் ஸ்பரிசம், பக்தர்களின் மேல் பட்டால் அவர்கள் நற்பேற்றைப் பெறுவதாக நம்பப்படுகிறது.