சிவலோக பதவி கிடைக்க, பெரும் செல்வத்தை அடைய சிவனை இப்படி வழிபடுங்க!!!

சிவபெருமானை அடைவதற்கு சரணாகதி ஒன்றே வழியாகும். சிவன் நினைத்தால் ஒருவரை ஒன்றும் இல்லாதவராக ஆக்கவும் முடியும். செல்வந்தராக மாற்றவும் முடியும். ஈசனை எப்படி வழிபடுவது? என்பதைப் பற்றி இங்கு பார்க்கலாம்...!!


சிவாலயங்களில் இறைவனை வணங்கும் பொழுது பலிபீடத்திற்கு அருகில் நின்றுதான் வணங்க வேண்டும்.

சன்னிதி கிழக்கு நோக்கி இருந்தால் பலிபீடத்திற்கு தென்கிழக்கு மூலையில் நின்று வணங்க வேண்டும்.

தெற்கு மற்றும் மேற்கு நோக்கிய சன்னிதி இருந்தால் பலிபீடத்திற்கு தென்மேற்கு மூலையில் நின்று வணங்க வேண்டும்.

சன்னிதி வடக்கு நோக்கி இருந்தால் பலிபீடத்திற்கு வடமேற்கு மூலையில் நின்று வணங்க வேண்டும்.

சிவாலயங்களில் கொடிமரத்திற்கு அருகில் நின்று மூன்று முறை வணங்க வேண்டும். அதுபோல் மூன்று முறை வலம் வர வேண்டும். வலம் வரும்பொழுது கொடி மரத்தையும் சேர்த்து வலம் வர வேண்டும். ஆலயத்திற்குள் இருக்கும் மற்ற சன்னதிகளில் விழுந்து வணங்கக்கூடாது.

ஆலயத்தில் அபிஷேகம் நடைபெறும் சமயத்தில் எந்த வேண்டுதல்களையும் செய்யக்கூடாது. ஆலயத்திற்குள் இறைவனை அன்றி பிறரை வணங்கக்கூடாது. அபிஷேகம் நடைபெறும் சமயத்தில் அபிஷேகத்தை காண்பதை தவிர வேறு எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது. வெளியேறும் பொழுது கொடிமரம் அருகில் ஒருமுறை வணங்கிவிட்டு பின்பு செல்ல வேண்டும்.

சிவனுக்கு உரிய மலர்களை கொண்டு அர்ச்சனை செய்தால் செல்வவளம் மிகுதியாகும்.

ஈசன் விரும்பும் எருக்கம் பூ, அருகம்புல், திருநீறு, ஊமத்தை போன்றவற்றை அளிப்பதால் குபேர யோகம் கிடைக்கப்பெறும்.பல்வேறு புஷ்பங்கள் மற்றும் நீர்கொண்டு ஈசனை வழிபடுவதால் மன அமைதி கிடைக்கும். மன இறுக்கம் தளர்ந்து விடும். சதபத்ரம், தாமரை, வில்வம் இவற்றால் அர்ச்சனை செய்பவர்களுக்கு பெரும் செல்வம் கிட்டும். ஜாதி மலர், அரளி, அத்தி, முல்லை, நீலோத்பவம் இவைகளால் அர்ச்சனை செய்பவர்களுக்கு சகல வளங்களும் நிறைந்து காணப்படும். ஒரே ஒரு கொன்றை மலரை ஈசனுக்கு சாற்றுபவர்களுக்கு பெறுதற்கு அரிய பாக்கியங்கள் கிட்டும்.

சகல தோஷங்களும் நீங்க வில்வத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். வில்வ அர்ச்சனை செய்யும் பொழுது அந்த இலையின் பின்பக்க நரம்பு இறைவனின் திருமேனி மீது படும்படி செய்ய வேண்டும். சிவனுக்கு சாற்றிய வில்வத்தை ஒரு மாத காலத்திற்கு நீரில் கழுவிவிட்டு மீண்டும் உபயோகம் செய்யலாம்.

உலகிலுள்ள அனைத்து உயிர்களையும் காக்கும் பொருட்டு சிவ மேனியில் சந்தனத்துடன் கஸ்தூரி மஞ்சள், கோரோசனை, குங்குமப்பூ மற்றும் பச்சை கற்பூரம் ஆகியவற்றை கலந்து காப்பு அணிவிக்கிறார்கள். இக்கோலத்தை தரிசிப்பவர்களுக்கு கோடி வருடம் சிவலோக பதவி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

சிவாலய திருப்பணிகளில் உங்களால் முடிந்த உதவிகளை செய்வதன் மூலம் உங்கள் சந்ததியினரே வளமாக வாழ்வார்கள். நீங்கள் செய்யும் சிறு உதவியும் குலம் தழைக்க உதவும்.