காசிம் சுலைமானி கொலையும்..! அமெரிக்கா - ஈரான் போர் பதற்றமும்..! இந்தியாவுக்கும் காத்திருக்கும் ஆபத்து! என்ன தெரியுமா?

தளபதி காசிம் சுலைமானி கொலையை தொடர்ந்து அமெரிக்கா - ஈரான் இடையே போர் வெடிக்கும் பட்சத்தில் நேரடியாக பாதிக்கப்படும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.


ஈரானின் மிக முக்கியமான தளபதியாக செயல்பட்டு வந்த காசிம் சுலைமானி கடந்த வாரம் அமெரிக்காவால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். ஈராக்கில் அமெரிக்காவிற்கு இருந்த தொடர்புகளை துடைத்து எறியும் பணியில் ஈடுபட்டிருந்த சுலைமானி கொலை ஈரானை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஏனென்றால் ஈரானின் நாடு கடந்த ராணுவ விவகாரங்களை கவனித்துக் கொண்டவர் சுலைமானி தான்.

சிரியா பிரச்சனை, சவூதியுடனான பதற்றம், ஈராக் உடனான ஈரானின் நல்லுறவு மேலும் மத்திய கிழக்கு நாடுகளில் ஈரானின் வியூகம் போன்றவற்றுக்கு சுலைமானி தான் பொறுப்பாளராக இருந்து வந்தார். சுலைமானியை பொறுத்தவரை ஈரானில் அவர் ஒரு ஹீரோ. அந்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்கள் சுலைமானியை அந்நாட்டின் ஜேம்ஸ் பாண்டாக கருதி வந்தனர்.


ஒரு கட்டத்தில் சினிமா நடிகர்களுக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் போல சுலைமானிக்கு ரசிகர்கள் உருவாகத் தொடங்கினர். இதனால் பெரும் எண்ணிக்கையில் சுலைமானியை சமூக வலைதளங்களில் பின்தொடர ஆரம்பித்தனர். இதற்கு எல்லாம் காரணம் சுலைமானியின் போர் வியூகம் தான் என்கிறார்கள். சவூதியின் அராம்கோ எண்ணெய் ஆலையில் கடந்த ஆண்டு நடத்திய தாக்குதலின் பின்னணியில் சுலைமானி இருப்பதாக நம்பப்பட்டது.

இந்த சூழலில் தான் அமெரிக்காவை காக்கும் பொருட்டு சுலைமானியை கொலை செய்ததாக அறிவித்தது அமெரிக்கா. சுலைமானி இறப்பு ஈரானிற்கு பேரிழப்பு. அதனால் தான் அவர் உடல் இறுதிச்சடங்கிற்காக ஈரான் தலைநகர் டெஹ்ரொன் கொண்டு வரப்பட்ட போது லட்சக்கணக்கில் மக்கள் திரண்டனர். அனைவருமே கருப்பு உடை அணிந்திருந்தனர். இதனால் ஈரான் சாலைகள் கருப்பு நிறத்திற்கு மாறிப்போயிருந்து.


ஈரானின் சக்தி மிக்க தலைவராக கருதப்படும் கொமேனி சுலைமானியின் சவப்பெட்டியை பார்த்து கதறி அழுதார். ஒரு நாட்டின் மிக உயரிய தலைவர் சவப்பெட்டியை பார்த்து கதறி அழும் வீடியோ அந்நாட்டு மக்களை மட்டும் அல்ல பலரையும் உலுக்கி எடுத்தது. இந்த நிலையில் பதிலடி உறுதி என்று ஈரான் பகிரஙகமாக அறிவிக்க ஆரம்பித்துள்ளது.

சுலைமானி வகித்து வந்த பதவிக்கு தற்போது நியமிக்கப்பட்டுள்ள இஸ்மாயில் கானி, அமெரிக்கா மறக்க முடியாத மரண அடி கொடுக்க உள்ளதாக தெரிவித்தார். இதே போல் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜாவித், அமெரிக்க அதிபர் டிரம்பின் சொத்துகளை பட்டியலிட்டு தாக்க உள்ளதாக கூறி அதிர வைத்துள்ளார்.

போதாக்குறைக்கு, சுலைமானியின் மகள் ஜெய்னாப் சுலைமானியும், ஈரான் மக்களுக்கு அந்நாட்டு தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றினார். அப்போது டிரம்ப் பைத்தியக்காரத்தனமாக தனது தந்தை விஷயத்ல் செயல்பட்டுள்ளதாக அவர் கூறினார். அமெரிக்க மக்கள் தங்கள் மகன்களையும், மகள்களையும், சகோதரர்களையும், சகோதரிகளையும் இழந்து தவிக்கும் நிலைக்கு தள்ளப்படப்போகிறார்கள் என்று அவர் சூளுரைத்துள்ளார். 


இப்படி ஈரான் - அமெரிக்கா இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது. ஒரு வேலை இரண்டு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டால் உடனடியாக பாதிக்கப்படும் நாடு இந்தியா தான் என்கிறார்கள். ஏனென்றால் இந்தியா கச்சா எண்ணெய்யை அதிக அளவில் ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்கிறது. போரில் ஈரான் தீவிரமானால் அந்நாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தப்படும், விநியோகமும் பாதிக்கப்படும். இதனால் இந்தியாவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயரும் என்கிறார்கள்.

ஈரானிடம் இருந்து இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்யை வேறு எந்த நாட்டாலும் உடனடியாக வழங்க முடியாது என்றும் கூறுகிறார்கள். எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டால் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறுகிறார்கள். இதனால் ஈரான் - அமெரிக்கா இடையிலான பதற்றம் தணிய வேண்டும் என்பதே இந்தியர்களின் எதிர்பார்ப்பாக இருக்க வேண்டும்.