மதுரையில் பெரும் பதற்றம்! கடைகள் அடைப்பு! பேருந்து மீது கல்வீச்சு! சாலை மறியல்!

விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வலியுறுத்தி நடை பெற்று வரும் போராட்டத்தால் பதற்றம் நீடிக்கிறது.


மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்ட வேண்டும், அவரது வரலாற்றை 7ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பல்வேறு தேவர் சமுதாய அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. 

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, இன்று மதுரை மாநகரில் கடை அடைப்புக்கு தேவரின் தேசபக்தி பேரவை அழைப்பு விடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து கோரிப்பாளையத்தில் உள்ள அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. அங்கு அமைந்துள்ள தேவர் சிலை முன்பாக ஏராளமானோர் திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழங்கினர்.

இதை அடுத்து ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூட்டம் கூடாமல் இருக்க ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து தடுக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் சிலர் வாக்குவாதம் செய்தனர். இதனால் கோரிப்பாளையம் பகுதியில் உச்சகட்ட பதற்றம் நிலவியது. அண்ணா, பெரியார், மாட்டுத்தாவணி, பேருந்து நிலையங்களில் போராட்டத்தில் ஈடுபடச் சென்றோர் கைது செய்யப்பட்டனர். 

தல்லாகுளம் வள்ளுவர் காலனியில் அரசுப் பேருந்து மீது கல்வீசப்பட்டதில் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை மறிக்க முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர். 

பதற்றம் நிலவுவதால் கோரிப்பாளையம், தல்லாகுளம்,சிம்மக்கல், அண்ணா பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான உணவகங்கள், தேநீர் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. எம்.ஜி.ஆர் காய்கறி சந்தை மற்றும் பழக்கடை சந்தைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஒரு வாரகாலமாகவே இந்த விவகாரத்தை முன்வைத்து மதுரையில் போராட்டம் நடைபெற்று வருகிறது- இன்றைய  போராட்டம் முன் எப்போதும் இல்லாத வகையில் தீவிரமானது. இதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.