விவசாயத்தின் புரட்சிக் குரலாக ஒலித்த காப்பான்! சூர்யாவை சந்தித்து பாராட்டிய விவசாயிகள்!

காப்பான் படத்தில் விவசாயிகளுக்காகக் குரல் கொடுத்த நடிகர் சூர்யாவை நேரில் சந்தித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.


கடந்த வாரம் சூர்யா நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கிய காப்பான் படம் வெளியானது. காவிரி டெல்டா விவசாயத்தை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளின் அவசியம் மற்றும் விவசாய நிலத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் காப்பான் படத்தில் காட்சகிள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் சூர்யா மற்றும் கேவி ஆனந்தை சந்தித்தனர். அப்போது, பெரும் ஆபத்து சூழ்ந்திருக்கும் டெல்டா மாவட்டங்களின் நிலையை அப்பட்டமாகப் படமாக்கி, முழங்கி இருக்கும் நடிகர் சூர்யாவையும் இயக்குநர் கே.வி.ஆனந்தையும் விவசாயிகள் பாராட்டினார்கள்.

கடைக்கோடி மக்களுக்கும் புரியும் வண்ணம் விவசாய பிரச்னைகளை உரத்துச் சொல்லி, பெரிய அளவிலான கார்பரேட் நிறுவனங்கள் பின்னுகிற சதி வலைகளை அம்பலப்படுத்தி காப்பான் படம் மிகப்பெரிய விவசாயப் புரட்சிக்கே வித்திட்டிருக்கிறது என்று விவசாயிகள் கூறியுள்ளனர். விவசாயிகள் நலனில் இவ்வளவு அக்கறையோடு காப்பான் படத்தில் பங்களிப்பு செய்த நடிகர் சூர்யாவுக்கும் இயக்குநர் கே.வி.ஆனந்துக்கும் விவசாயிகள் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் பாராட்டினார்கள்.

விவசாயத்தைச் சூழும் ஆபத்துகளை எதிர்த்து தொடர்ந்து போராடும் தங்களுக்கு காப்பான் படம் மூலமாக மிகுந்த நம்பிக்கையையும் உத்வேகத்தையும் சூர்யா ஏற்படுத்தி இருப்பதாகவும் சொன்ன விவசாய சங்க நிர்வாகிகள் டெல்டா மாவட்டங்களைப் பார்வையிடவும் அழைப்பு விடுத்தார்கள்.