முதல்வர் கண்ணீர் அஞ்சலி! இறைவன் தந்த இனிய கொடை எஸ்.பி.பாலசுப்பிரமணியன்..!

தமிழ்நாட்டு மக்களை தேனினும் இனிமையான தனது குரலால் கவர்ந்த பிரபல திரைப்பட பின்னணிப் பாடகரும், திரைப்பட நடிகரும், ‘எஸ்.பி.பி’ என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அவர்கள் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று (25.9.2020) இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன் என்று தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.


இந்திய இசை உலகத்திற்கு 20-ஆம் நூற்றாண்டில், இறைவன் அளித்த இனிய கொடையாக வந்து உதித்தவர் மறைந்த.எஸ்.பி.பாலசுப்பிரமணியன் அவர்கள். “ஆயிரம் நிலவே வா” என்ற புகழ் வாய்ந்த பாடலை அவர் தான் பாட வேண்டும் என்று காத்து இருந்து வாய்ப்பு அளிக்கும் அளவுக்கு 

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் இதயத்தில் இடம் பெற்ற இன்னிசை நிலா திரு.எஸ்.பி.பாலசுப்பிரமணியன் அவர்கள். அன்னாரது குரலில் நேற்றும், இன்றும், நாளையும் ஒலிக்கும் “தங்கத் தாரகையே வருக வருக, தமிழ் மண்ணின் தேவதையே வருக வருக” என்ற மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மாவின் புகழ் பாடும் பாடல், கழகத்தின் வரலாற்றில் என்றும் இணைந்திருக்கும். 

எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அவர்கள் கடவுள் மீது பக்தி கொண்டு “கந்த சஷ்டி கவசம்” மற்றும் “ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில்”, போன்ற பல பாடல்களை உள்ளம் உருக பாடி, பக்தர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர்.  

எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அவர்களின் குரல் இனிமைக்கு நிகர் அவரே. இவர் மிக அதிகமான பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்து, புகழின் உச்சிக்கே சென்றவர். இவர் பாடகர், நடிகர், பின்னணி குரல், இசையமைப்பாளர் போன்ற பன்முகத்தன்மை கொண்டவர்.

கலைமாமணி விருது, தேசிய விருது, பல மாநில விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளுக்கு திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அவர்கள் சொந்தக்காரர். மத்திய அரசு இவருக்கு பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை வழங்கி கௌரவித்தது.   

இவரது அவர்களின் மறைவு தமிழ் திரைப்படத் துறைக்கும், இசை ரசிகர்களுக்கும் மிகப் பெரிய இழப்பாகும். இவருடைய இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது. அவர் மறைந்தாலும், அவரது பாடல்கள் என்றும் நம் செவிகளில் ஒலித்துக் கொண்டே அன்னாரது நினைவைப் போற்றிக் கொண்டிருக்கும்.

தனது ஈடு இணையற்ற குரல் வல்லமையால் தமிழ் திரைப்பட உலகுக்கும், குறிப்பாக தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்த எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அவர்களின் மறைவு திரைப்படத் துறைக்கும், கலை உலகிற்கும், எனக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரை உலக நண்பர்களுக்கும், ரசிக பெருமக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.