மணக்கோலத்தில் காத்திருந்த மணமகன்! குளிக்கச் சென்ற மணமகள் திடீர் மாயம்! கல்யாண வீட்டு பரபரப்பு!

திருமணத்தன்று பெண் காணாமல் போன சம்பவமானது வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வேலூர் மாவட்டத்தில் வெள்ளைக்குட்டை என்னும் கிராமம் அமைந்துள்ளது. இங்கு சின்னத்தம்பி என்பவர் விவசாயம் தொழில் புரிந்து வருகிறார். இவருடைய மகளின் பெயர் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யா திருமண வயதை எட்டியதால் பெற்றோர் திருமணம் செய்து வைக்கும் ஏற்பாடுகளைத் தொடங்கினர்.

அதன்படி மோட்டூர் கிராமத்தை சேர்ந்த பிச்சாண்டி என்பவரின் மகனான விநாயகத்தை மணமகனாக தேர்ந்தெடுத்தனர். இவ்விருவருக்கும் நேற்று திருமணம் நடக்கவிருந்தது. 

மணப்பெண்ணுக்கு செய்ய வேண்டிய சம்பிரதாயங்களான நலங்கு ஆகியவற்றை செய்தனர். அதன் பின்னர் ஐஸ்வர்யா குளிக்க சென்றார். குளிக்க சென்ற ஐஸ்வர்யா நெடுநேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகித்த உறவினர்கள் குளியலறை கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர்.

ஆனால் ஐஸ்வர்யா அங்கு இல்லாததை கண்டு இரு வீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர். ஐஸ்வர்யாவை பல்வேறு இடங்களில் தேடி அலைந்தனர். ஆனால் ஐஸ்வர்யாவை கண்டுபிடிக்க இயலவில்லை. தன்னுடைய மகனின் திருமணநாளன்று மணப்பெண் ஓடியுள்ளதை கண்டு பிச்சாண்டி அதிர்ச்சியடைந்தார். உடனடியாக தன் உற்றார் உறவினர்களுடன் சொந்த ஊருக்கு திரும்பி சென்றார்.

சின்னத்தம்பி தன்னுடைய உறவினர்களுடன் சென்று அப்பகுதி காவல்நிலையத்தில் மகளை காணவில்லை என்று புகாரளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவமானது நேற்று வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.