கடந்த ஓர் ஆண்டாக தினகரன் சொல்லிவந்த ஆருடம், ஜோதிடம் என எதுவுமே பலிக்கவில்லை.
தினகரனை இயக்குவது அனுராதாவும் ஜனாவும்தான்! புலம்பும் நிர்வாகிகள்! அ.ம.மு.க.வில் என்னதான் நடக்கிறது?
ஆட்சியும் கலையவில்லை, ஆட்களும் நகரவில்லை. அதனால், தினகரனுடன் இருந்த அத்தனை பேரும் ஏதேனும் காரணம் கிடைத்தால் தப்பித்து வேறு கட்சிக்குப் போகலாம் என்று நினைத்தனர், அதுவும் நடக்கவில்லை. அழைப்பு இல்லாமல் போனால் அவஸ்தைதான் என்று இப்போது அ.ம.மு.க.விலேயே இருக்கிறார்கள்.
தேனி தொகுதியில் போட்டியிட தயாராக இருந்த தினகரன் தலையிலே குட்டி, அமைதியாக இருக்கும்படி உத்தரவு கொடுத்தது அவரது மனைவி அனுராதாதான் என்கிறார், இப்போது அ.ம.மு.க.வில் முக்கியப் பொறுப்பு வகிக்கும் ஒரு நபர்.
தன்னை ஒரு ஜெயலலிதா போலவே தினகரன் எண்ணிக்கொண்டு இருக்கிறார். அதனால் கட்சி நிர்வாகிகள் எவருடனும் பேசுவதற்கு விரும்புவதே இல்லை. அந்த சாதாரண வேலைகளை எல்லாம் செய்துமுடிப்பவர், தினகரனின் மனைவி அனுராதாரான். அவருக்கு உதவியாக கட்சிப் பணிகளைக் கவனிப்பவர் ஜனா.
கட்சிக்காரர்களால் இப்போது தினகரனை தொடர்புகொள்ள முடியாது. நாங்கள் ஏதாவது பேசவேண்டும் என்றால் ஜனா அல்லது அனுராதாவிடம் பேசவேண்டும். அவர்கள் மனது வைத்தால்தான் தினகரனிடம் பேச முடியும்.
இப்போது காசுள்ள வேட்பாளர்கள் தேர்வு தொடங்கி, வேட்புமனு தாக்கலுக்கு நேரம் குறித்துக் கொடுத்தது வரை எல்லாமே அனுராதாதான் என்கிறார்கள். ஆனால், ஜனா அல்லது அனுராதாவிடம் இருந்து போன் வந்தாலே எங்கள் நிர்வாகிகள் அலறுகிறார்கள். ஏனென்றால் பெரும்பாலும் பணம் கேட்டுத்தான் வருகிறது என்று கலங்குகிறார்கள்.
சேராத இடம் சேர்ந்து என்ற பாடல் எங்களுக்குத்தான் பொருந்தும் என்கிறார்கள் நிர்வாகிகள். பரிதாபம்தான்.