சியோல்: 2 வயது மகனின் கண் முன்னாலேயே மனைவியை அடித்து சித்ரவதை செய்த கணவனுக்கு பல தரப்பிலும் கண்டனம் குவிந்து வருகிறது.
2 வயது மகன் கண் முன் மனைவிக்கு கணவன் கொடுத்த கொடூர தண்டனை! நெஞ்சை உறைய வைக்கும் செயல்!
சமூக ஊடகங்களின் வரவால் நாளுக்கு நாள் ஏதேனும் ஒரு விசயம் வைரலாக பரவுவது வாடிக்கையாக உள்ளது. இதன்படி, தென்கொரிய நாட்டில் மொபைல்ஃபோனில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ தற்போது உலகம் முழுக்க பரவி வருகிறது. இந்த வீடியோவில், 2 வயது சிறுவன் அழுதபடி நிற்க, அவன் முன்பாகவே, அவனது தாயை, தந்தை அடித்து உதைக்கிறார்.
காரணம், அந்த பெண், வியட்நாம் நாட்டைச் சேர்ந்தவர் என்பதால், தென்கொரிய மொழியை சரியாகப் பேசவில்லையாம். இதன்பேரில், கிட்டத்தட்ட 3 மணிநேரம் அந்த பெண்ணை, அந்த நபர் அடித்து சித்ரவதை செய்திருக்கிறார்.
இந்த வீடியோவை தனது மொபைல்ஃபோனில் படம்பிடித்த அப்பெண், தனது உறவினர்களுக்கு பகிர்ந்து, தனது கணவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். இதன்பேரில், சவுத் ஜியோலா மாகாணத்தில் உள்ள யோங்கம் என்ற பகுதியில் வசிக்கும் அந்த நபர் மீது போலீசில் புகார் தரப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, போலீசார் தெரிவிக்கின்றனர்.
இதுதவிர, அந்த பெண்ணின் உறவினர்களே இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவேற்றினர். இதையடுத்து, இது தற்போது வைரலாகி வருகிறது.