கடைகளில் விற்கும் தீபாவளி லேகியம் சாப்பிடலாமா? யாரெல்லாம் தீபாவளி லேகியம் சாப்பிடக்கூடாது?

காலங்காலமாக கிராமப்புறங்களில் தீபாவளி லேகியம் செய்வது ஒரு கலாச்சாரம்.


நகர்ப்புறங்களில் யாரும் பெரிதாக செய்வதில்லை. ரெடிமேடாக ஸ்வீட் கடைகளிலேயே அதை விற்க ஆரம்பித்துவிட்டார்கள். எப்படி அல்வா முறுக்கு உள்ளிட்ட பட்சணங்கள் செய்வதற்கு ரெடிமேட் பவுடர் வந்ததோ அதேபோல் இப்போது தீபாவளி லேகியம் செய்வதற்கும் ரெடிமேட் வந்துவிட்டது.

ஆனால் அவை சரியான கலவையில் உள்ளதா, கெடாமல் இருக்க கெமிக்கல் ஏதேனும் சேர்க்கப்பட்டுள்ளதா என்பது நமக்குத் தெரியாது. அதனால் அது போன்ற ரெடிமேட் பொருள்களைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.

இந்த தீபாவளி லேகியத்தை மருந்துபோல பாக்கெட்டில் போட்டு விற்க ஆரம்பித்துவிட்டார்கள். அதற்கு எந்தவிதமான தரக்கட்டுப்பாடும் கிடையாது. அது எப்போது தயாரிக்கப்பட்டது, எந்தெந்த பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பது உள்ளிட்ட எந்தவித விவரங்களும் அதில் இருக்காது. அதில் கலப்படமும் செய்யப்பட்டிருக்கலாம். எனவே ரெடிமேடாக வாங்கி சாப்பிடுவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

தீபாவளி மிகவும் அவசியம், ஏனெனில் அந்த காலத்திலெல்லாம் இது போன்ற பண்டிகைகளின் போது தான் இனிப்பு, காரம் உள்ளிட்ட பட்சணங்கள் சாப்பிடுவார்கள். ஆனால் இன்று ஒவ்வொரு நாளும் தீபாவளி போன்று கண்ணில் படுவதை எல்லாம் நாம் சாப்பிடுகிறோம். ஆனால் இவை முறையாகச் செரிக்கவும், உடலில் கொழுப்பு உள்ளிட்ட விஷயங்கள் சேராமல் இருக்கவும் தினமும் சாப்பிடுகிறோமா என்றால் அதுவும் இல்லை.

அன்று நம்மிடையே ஒரு ஒழுங்கான வாழ்க்கை முறை இருந்தது. அன்றைய காலகட்டத்தில் ஒரு விழாவை கொண்டாட இதுபோன்ற பட்சணங்களைச் செய்தார்கள். அந்த பட்சணங்கள் ஒரே நாளில் மட்டும் சாப்பிட்டு முடித்து போகிறவையல்ல.

தொடர்ச்சியாக நான்கு நாட்கள் வைத்திருந்து சாப்பிடுபவைதான். ஆகையால் அதன் விளைவாக நம் உடலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதை மனதில் வைத்து இந்த தீபாவளி லேகியத்தை செய்து சாப்பிட்டு வந்தார்கள்.

இதில் சேர்த்துள்ள சுக்கானது கொழுப்பை நன்றாகக் குறைக்கும். இஞ்சி செரிமானத்தை மேம்படுத்தும். மிளகும், தனியாவும் வாய்வுத் தொல்லை வராமல் செய்யும். தேன் மலச்சிக்கல் வராமல் தடுக்கும். ஓமம் உணவினால் ஏற்படும் அலர்ஜியை சரிசெய்யும். மொத்தத்தில் செரிமான மண்டலத்தை சீராக்கி அதன் செயல்பாட்டை மேம்படுத்தும்.

சர்க்கரை நோயாளிகள் இந்த லேகியம் சாப்பிடக் கூடாது. அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் ஒரே ஒருமுறை சாப்பிடலாம். அதுவும் நிறைய எடுத்துக் கொள்ளக்கூடாது. தவிர உள்ளவர்கள் நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் வயிற்றுப் பிரச்சினைகளுக்கு மாத்திரை சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள் தீபாவளி லேகியம் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்கவும்.

தினமும் இரண்டு வேளை வீதம் தீபாவளியை ஒட்டிய இரண்டு மூன்று நாட்கள் கோலிக்குண்டு அளவு எடுத்து சாப்பிடலாம். அதையும் வெந்நீருடன் சேர்த்து தான் சாப்பிட வேண்டும். பாலுடனோ, வெறும் தண்ணீருடனோ சேர்த்து சாப்பிடக்கூடாது.

குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் அரை டீஸ்பூன் அளவு மூன்று நாளைக்கு தினம் இரண்டு வேளை கொடுக்கலாம். இந்த லேகியத்தை மருந்தாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். தின்பண்டமாக யாரும் சாப்பிடக்கூடாது.