கொரோனா காலத்தில் அ.தி.மு.க.வினர் பெரும்பாலோர் அமைதியாக வீட்டுக்குள் முடங்கிக்கிடக்க, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் தினமும் வீட்டைவிட்டு வெளியே வந்து மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர்.
ஸ்டாலினை கைது செய்வாரா எடப்பாடி பழனிசாமி! கொரோனா அரசியல் ஆரம்பம்
ஸ்டாலினுக்கு தடை போடுவதற்காகவே இன்று எடப்பாடி பழனிசாமி, புதியதொரு அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இன்று முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா தொற்றுநோய் பரவுவதை தடுக்க, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், சில மாவட்டங்களில் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள், மக்களுக்கு உதவுவதாக கூறிக்கொண்டு , சமைத்த உணவையும், பொருட்களையும் விநியோகம் செய்வதாக ஊடகங்கள் மூலமாக தெரியவருகிறது.
மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்த்து, அதன் மூலம் சமூக இடைவெளியை பின்பற்றி தொற்று நோய் பரவுவதை தடுக்கவே, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டப்படியும், குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144-ன் படியும், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும், அத்தியாவசியமான பொருட்களுக்கு மட்டும், சில குறிப்பிட்ட நேரங்களில் தனித்தனியாக சென்று, சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்களை வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா நோய் தொற்று நடவடிக்கைகளுக்கு உதவி செய்ய விரும்பும் நபர்களும், பல்வேறு அமைப்புகளும் வழங்க விரும்பும் நிதியை, முதலமைச்சர் நிவாரண நிதிக்கும், பொருட்களாக வழங்க விரும்பினால்,
அதை சென்னை மாநகரத்தில் மாநகர ஆணையரிடமும், மற்ற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும் வழங்க ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது இந்நிலையில், சில நபர்களும் சில அமைப்புகளும், அரசியல் கட்சிகளும், ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளுக்கு புறம்பாக, பல்வேறு இடங்களில் உணவு பொருட்களையும் அல்லது அத்தியாவசிய சமையல் பொருட்களையும் நேரடியாக வழங்குவது,
தடை உத்தரவை மீறும் செயலாகும். இந்த அறிவுரைகளை மீறி யாரேனும் செயல்பட்டால், அரசின் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கருதி, அவர்கள் மீது உரிய சட்டப்படியான நடவடிக்கையை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவர்களும், காவல் துறை அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்புக்குப் பிறகு ஸ்டாலின் வெளியே வருவாரா, அப்படியே வந்தாலும் எடப்பாடி பழனிசாமி கைது செய்வாரா என்பதுதான் இப்போது மிகப்பெரும் கேள்வி.