அமித்ஷாவும் மோடியும் ஏன் குழப்புகிறார்கள்? ஏமாற வேண்டாம் மக்களே, எச்சரிக்கிறார் ஜவாஹருல்லா!

தேசிய குடியுரிமை பதிவேடு குறித்து மோடியும் அமித்ஷாவும் ஆளுக்கொரு ஸ்டேட்மென்ட் கொடுத்து மக்களை குழப்பிவருகிறார்கள்.


இவர்கள் வலையில் இஸ்லாம் மக்கள் விழுந்துவிடக் கூடாது என்று எச்சரிக்கை செய்திருக்கிறார் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹருல்லா. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த மசோதா குறித்த விவாதத்தில் பேசும்போது, குடியுரிமை திருத்த சட்டத்தைத் தொடர்ந்து தேசிய குடியுரிமை பதிவேடு திட்டம் அமுல்படுத்தப்படும் என்று அமித்ஷா குறிப்பிட்டிருந்தார்.

மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் இல்லாமல்தான் அமித்ஷா இந்த அறிவிப்பை செய்தாரா? கடந்த நவம்பர் 26, 2014 அன்று நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் டாக்டர் டி.என்.சீமா என்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜுஜு, “தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) என்பது தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (என்ஆர்சி) முதல் நடவடிக்கை” என்று கூறியுள்ளார்.

இதே போல் மக்களவையில் 2015 ஏப்ரல் 21 அன்று ராம்சிங் ரத்வா என்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பாரதிபாய் சவுத்ரி “தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்)ஐ பயன்படுத்தி தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) உருவாக்கப்படும்” என்று கூறினார்.

அமித்ஷா உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு 2019 ஜூலை 2019ல் வெளியிட்ட அரசு (கெஜட்) அறிவிக்கை தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்), குடியுரிமை 2003ல் வகுக்கப்பட்ட குடிமக்கள் பதிவு மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்கல்) விதிகள் பிரிவு (3)ன் உட்பிரிவு (4)ன் அடிப்படையில் மேம்படுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளதற்கு என்ன பதில் அளிக்கப் போகிறார்.

இந்த விதி 3 தேசிய குடியுரிமை பதிவேடு (என்ஆர்சி) தொடர்பானது. இந்த விதியின் உட்பிரிவு 4 தான் இந்திய குடிமக்களுக்கான தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.ஐ.சி) தயாரிப்பது குறித்த வழிவகையை செய்கிறது.

தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்தும் தேசிய மக்கள்தொகை பதிவேடு குறித்தும் உள்துறை அமைச்சர் அமித்ஷா நாட்டு மக்களுக்கு தவறான தகவல் தந்ததற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மத்திய பாஜக அரசின் சதிகளை நன்கு உணர்ந்துள்ள கேரளா மற்றும் மேற்கு வங்காள அரசுகள் தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) பணிகளை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளன.

தமிழக அரசு தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்) தொடர்பான பணிகளை நடத்தக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். குடிமக்கள் திருத்தச் சட்டத்தை (சிஏஏ) அரசு முறைப்படி திரும்பப் பெறும் வரையிலும், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டிற்கும் இடையில் தொடர்பு இல்லை என்பதை மத்திய அமைச்சரவை தீர்மானமாக நிறைவேற்றும் வரையிலும் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராட்டங்கள் தொடர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இவர்களை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.