ஆதிச்சநல்லூர் தவிர எதுவும் இல்லை வைகோ பட்ஜெட் விளாசல்!

மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரிகளில் மாற்றம்செய்திருப்பதும் ஆதிச்சநல்லூரில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதைத் தவிர மற்ற எவையும் வரவேற்கப்படக்கூடியவை அல்ல என்று கருத்துத் தெரிவித்துள்ளார், வைகோ.


ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இன்று தாக்கலான மைய அரசின் நிதிநிலைத் திட்டம் தொடர்பான தன்னுடைய அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

அந்த அறிக்கை விவரம்: மத்திய வரவு -செலவுத் திட்ட உரையின் தொடக்கத்தில், பொருட்கள் மற்றும் சேவை வரி (GST) நாட்டை ஒற்றுமைப்படுத்தியுள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். ஆனால், பா.ஜ.க. அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகைப் பதிவேடு ஆகியவை நாட்டைப் பிளவுபடுத்தி இருக்கிறது என்பதுதான் உண்மை.

2020-21 நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 10 விழுக்காடு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், நடப்பு நிதி ஆண்டில் 4.8 விழுக்காடாக பொருளாதார வளர்ச்சி சரிந்துள்ள நிலையில், அதிலிருந்து மீள்வதற்கான சாத்தியக்கூறுகள் தெரியவில்லை.

வேளாண்துறை வளர்ச்சிக்காக 15 அம்சத் திட்டத்தைச் செயல்படுத்த மாநிலங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதில், விவசாயிகள் தற்கொலைக்குக் காரணமான கடன் சுமைக்கு நிரந்தரத் தீர்வோ, வேளாண் கடன்கள் தள்ளுபடி அறிவிப்போ இல்லாதது ஏமாற்றம் தருகிறது. 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவோம் எனக் கூறுவது, 2014 ஆம் ஆண்டிலிருந்து வெறும் அறிவிப்பாக மட்டுமே இருக்கிறது.

புதிய கல்விக் கொள்கைக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து விரிவாக விவாதிக்காமல், நடப்பு ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்துவோம் என்ற அறிவிப்பு எதேச்சதிகாரமானது ஆகும். கல்வித் துறையில் அந்நிய நேரடி முதலிட்டுக்கு அனுமதி அளிப்பது நாட்டின் தற்சார்புச் சூழலை சீர்குலைத்து, உயர் கல்வித்துறை மற்றும் ஆராய்ச்சித் துறைகள் வணிகமயமாகும் ஆபத்து ஏற்படும்.

இரயில்வே துறையை முழுமையாக தனியார் மயம் ஆக்குவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் 14 இலட்சம் ஊழியர்களைக் கொண்ட மிகப்பெரிய பொதுத்துறையின் பொதுமக்கள் சேவை கடும் பாதிப்புக்கு உள்ளாகும். பயணிகள் கட்டணம், பொருட்கள் போக்குவரத்துக் கட்டணம் கடுமையாக உயரும்.

இந்தியாவில் காப்பீட்டுத் துறையில் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ள ஆயுள் காப்பீட்டுக் கழக(LIC)த்தின் பங்குகளை தனியாருக்குத் தாரைவார்ப்பது என்ற முடிவு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். லாபம் ஈட்டக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்கப்பட்டு 2.1 இலட்சம் கோடி ரூபாய் திரட்டப்படும் எனும் அறிவிப்பு பொதுத்துறை நிறுவனங்களைச் சீரழித்துவிடும்.

பா.ஜ.க. அரசின் பொருளாதாரக் கொள்கைகளால் குறிப்பாக ஜி.எஸ்.டி., மற்றும் பணமதிப்பிழப்பு போன்ற காரணங்களால் நாட்டின் தொழில்துறை மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இலட்சக்கணக்கான சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுவருகின்றன. இந்நிலையில், ஏற்றுமதி வளர்ச்சி விகிதம் சரிவு, உள்நாட்டில் உற்பத்திச் செலவு அதிகரிப்பு, ஏற்றுமதிச் சந்தை இழப்பு ஆகியவற்றைச் சீர்செய்ய தொழிலாளர் சட்டங்கள் உள்ட பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பு தொழிலாளர் நலனைப் பலிகொடுப்பதாகும்.

உற்பத்தித் தொழில்துறை சந்தித்து வரும் நெருக்கடிகளுக்கு உரிய தீர்வு காணப்படவில்லை. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை வாய்ப்பின்மை விகிதம் 7.7 விழுக்காடாக அதிகரித்து இருக்கிறது. புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் உறுதியான திட்டம் ஏதும் இல்லை.

மாநில அரசுகளின் அதிகாரத்தின் கீழ் வரும் பொது சுகாதாரத் துறையை மத்திய அரசு தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயற்சிப்பது மாநில உரிமைகளை நசுக்குவது ஆகும். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளை தனியார் நிறுவனங்களுடன் இணைத்து, புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மருத்துவக் கல்வி எட்டா உயரத்துக்குச் சென்றுவிடும்.” என்று வைகோ விமர்சனங்களை பட்டியலிட்டுக் கூறியுள்ளார்.