இந்த ஆண்டும் ஜெயலலிதா சமாதியை மறந்துபோன எடப்பாடி, பன்னீர் குரூப்..!

ஜெயலலிதாவை பார்த்து பேசுவதற்கு பயந்த நிர்வாகிகள், இப்போது அவரது சமாதிக்குப் போவதற்கு அச்சப்படுகிறார்கள் என்று பேசப்படுவது உண்மை என்று மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள் அ.தி.மு.க.வின் இரட்டைத் தலைவர்கள்.


ஆம், பிப்ரவரி 24ம் தேதியன்று கொண்டாடப்படும் ஜெ. பிறந்த நாள் நிகழ்ச்சிகள் ராயப்பேட்டை அலுவலகத்திலேயே நடத்தப்பட உள்ளதாக அ.தி.மு.க. செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இதோ, அவர்களது செய்திக்குறிப்பு.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிரந்தரப் பொதுச் செயலாளராகவும், மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சராகவும் அரும்பணியாற்றிய இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 72-ஆவது பிறந்த நாளான 24.2.2020 - திங்கட்கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் திருவுருவச் சிலைக்கு,

கழக ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழ் நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் மஎடப்பாடி மு. பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கழகக் கொடியினை ஏற்றிவைத்து, இனிப்பு வழங்க உள்ளார்கள்.   

அதனைத் தொடர்ந்து, நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழ் சார்பில் தயார் செய்யப்பட்டுள்ள ``புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 72-ஆவது பிறந்த நாள் விழா சிறப்பு மலரை’’ வெளியிட உள்ளனர். நம் எல்லோரது இதயங்களிலும் நிரந்தரமாக வீற்றிருக்கும் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தமது பிறந்த நாளையொட்டி, ``ஆடம்பர விழாக்களைத் தவிர்த்து, கழக உடன்பிறப்புகள் அவரவர் சக்திக்கேற்ப ஏழை-எளிய மக்களுக்கு இயன்ற உதவிகளை செய்தால்,

அந்நிகழ்வுகள் பயன்பெறுவோரையும் மகிழ்விக்கும், இம்மண்ணில் தமிழக மக்களுக்காக உழைத்திட வேண்டும். அனைவரும் தத்தமது பகுதிகளில், கண் தானம், ரத்ததானம் செய்தல்; மருத்துவ முகாம் நடத்துதல்; கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, விளையாட்டுப் போட்டிகளை நடத்துதல்; மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் அவர்களுக்கான கல்வி உபகரணங்களை வழங்குதல்; ஏழை, எளியோருக்கு அன்னதானம் வழங்குதல்;

இலவச திருமணங்களை நடத்தி வைத்தல்; ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களுக்கு அறுசுவை உணவு வழங்குதல்; வேஷ்டி, சேலை வழங்குதல் உள்ளிட்ட மக்கள் மனம் குளிரும் வகையிலான நலத் திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

யாரும் தப்பித்தவறிக்கூட, ஜெயலலிதா சமாதிக்குப் போயிடாதீங்கப்பா...