நீங்கள் உற்சாகமாக வாழ.. இதோ ஆரோக்யமான அட்டவணை!

தினமும் சூரிய வெளிச்சம் படும்படியாக 15 நிமிடங்கள் நில்லுங்கள். இது மனதை ஒரு நிலைப்படுத்தும். மேலும் சருமத்தில் வைட்டமின் டி சத்து அதிகரிக்கும்.


காலை 5 .30 மணிக்கு தேன் கலந்து ஒரு கிளாஸ் எலுமிச்சை சாறு பருகுங்கள். இதனால், அன்று முழுவதும், வயிற்றில் எந்த பிரச்சனையும் அண்டாமல் வயிறு லேசாக இருக்கும். காலை 7.30 மணிக்கு மூன்று வகையான பழத்துண்டுகள், ஒரு கிளாஸ் பால் அருந்துங்கள். மூளை புத்துணர்ச்சி பெறும். காலை 9.30 மணிக்கு ஒரு கிளாஸ் கேரட் ஜூஸ் குடியுங்கள், இது உங்கள் கண்ணை பிரகாசமாக வைத்திருக்க உதவும்.

 காலை 11.30 மணிக்கு ஒரு கிண்ணம் வேகவைத்த காய்கறிகள், முளைவிட்ட பயிறு கலந்து தயிர் சாலட் சாப்பிடுங்கள்.  இது உங்கள் சருமத்தை பளபளவென வைத்திருக்கும். மதியம் 2.30 மணிக்கு ஒரு கிளாஸ் மோர். மாலை 4.30 மணிக்கு ஜூஸ், பழங்கள். 6 மணிக்கு ஒரு கிளாஸ் கேரட் ஜூஸ். இப்படி நீர்சத்து நிறைந்த மோர், ஜூஸ், வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ளும்போது உடலுக்கு குளிர்ச்சியும், மனதுக்கு மகிழ்ச்சியும் கிடைக்கும்.

இரவு 7.40 மணிக்கு இரண்டு எண்ணெய் சேர்க்காத சப்பாத்தி, பழங்கள், தயிர்சாலட். சிறிது தால். வயிறை மிதமாக வைத்திருக்கும்.இப்படி, ஒரு மாத உணவை பட்டியலிட்டு சாப்பிடும்போது, உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேறிவிடும். உடலில் எடை கூடாது. சருமத்தில் நிறமும் பொலிவும் கூடும். உடலும் உள்ளமும் உற்சாகத்தில் மிதக்கும்.

வாரத்திற்கு இரண்டு முறை, உடம்பு மற்றும் தலையில் நன்றாக எண்ணெயை ஊற்றி மசாஜ் செய்து, நன்றாக ஊறிய பிறகு சீயக்காய் போட்டுக் குளிப்பதன் மூலம் உடலில் வலி, சோர்வு நீங்கி, உற்சாகம் பிறக்கும்.கடலை மாவுடன், நன்றாகப் பொடித்த காய்ந்த ரோஜா மொட்டு, ஆவாரம்பூ, சம்பங்கி, மல்லி இவற்றை சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த பொடியை உடம்பில் தடவி, மென்மையாக மசாஜ் கொடுங்கள். பாடி ஸ்ப்ரே அடித்தது போன்று அன்று முழுவதும் உடல் வாசமாக இருக்கும்.

 20 மி.லி தேங்காய் எண்ணெயுடன் ஐந்து மி.லி எலாங் எண்ணெயை சேர்த்து உடல் முழுவதும் தடவி வந்தால் சருமம் புது பொலிவுடன் இருக்கும். சூடான நீரில் 5 சொட்டுகள் கேமோமைல் எண்ணெய்விட்டு ஆவி பிடியுங்கள். சுவாசம் சீராகும். சருமம் மிருதுவாகும். வறண்டுபோன பாதத்தில் பெப்பர்மின்ட் ஆயிலைத் தடவி வந்தால் பஞ்சு போன்று மென்மையாக இருக்கும். இயல்பான சருமத்தினர் சாமந்தி எண்ணெயை, கேரியர் ஆயிலுடன் சேர்த்து தினமும் குளிப்பதற்கு முன்பு தேய்த்தால், வறண்ட சருமம் பளபளவென மின்னும்.