ஜாலிக்குப் பேசுனா கைது செய்வீங்களா? நெல்லை கண்ணனுக்காக குரல் கொடுக்கும் திருமாவளவன்!

நெல்லை கண்ணன் கைது விவகாரத்துக்கு சீமான், வேல்முருகன் போன்ற ஒருசிலர் மட்டுமே எதிர்ப்பாவது தெரிவித்தனர். தி.மு.க., காங்கிரஸ் போன்ற கட்சிகள் இந்த கைது விவகாரத்தை கண்டுகொள்ளவே இல்லை.


வைகோ போன்றவர்கள் ஒருபடி மேலேயே போய், நெல்லை கண்ணன் பேசியது தவறு என்றே சொல்லிவந்தார்கள்.இந்த நிலையில் நெல்லை கண்ணனுக்காக குரல் கொடுத்திருக்கிறார் திருமாவளவன். அவர் ஏன் கைது செய்யப்பட்டிருப்பார் என்பதற்கும் புதிய காரணம் ஒன்றை சொல்கிறார்.

ஆங்கிலப் புத்தாண்டு நாளின் நள்ளிரவில் எண்பது வயதைத் தாண்டிய ஒரு மூத்த அரசியல்தலைவரான நெல்லைக் கண்ணன் அவர்களைத் தமிழகஅரசு கைதுசெய்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களையும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களையும் அவமதிக்கும் வகையிலும் வன்முறையைத் தூண்டும் வகையிலும் மேடையில் பேசினார் என்பதுதான் அவர்மீதான குற்றச்சாட்டு எனத் தெரியவருகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அவர் பேசும்போது அவர் மைய, மாநில அரசுகளை மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தமிழக முதல்வர், துணை முதல்வர், இந்தியப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு விமர்சித்துள்ளார்.

அவரின் ஆவேசத்துக்கு ஆட்சியாளர்களின் மக்கள் விரோத நடவடிக்கைகள், குறிப்பாக சிறுபான்மையினருக்கு எதிரான போக்குகள்தாம் காரணமாகும். இத்தகைய ஆவேசம் இன்று இந்தியா முழுவதும் கட்சிசார்பற்ற பொதுமக்களிடமிருந்தும் பரவலாக வெளிப்படுவதைக் காணலாம். நெல்லைக் கண்ணன் அவர்கள் மட்டுமின்றி, அனைத்துத் தரப்பினருமே பாஜக அரசின் இத்தகைய ஃபாசிசப் போக்குகளுக்கு எதிராக மிகவும் கடுமையாகவே குரல்கொடுத்து வருகின்றனர். 

மேடைப்பேச்சு, போராட்ட முழக்கம் போன்றவற்றில் ஒருமைவிளிப்பு என்பது சிலநேரங்களில் சிலருக்குத் தன்னியல்பாகவும் தவிர்க்க இயலாததாகவும் அமைந்துவிடுகிறது. அதாவது, ‘அவன், இவன், நீ, உன் போன்ற ஒருமைவிளிப்புகள் ஒருசிலருக்கு ஆவேச உணர்ச்சிகளின் வெளிப்பாடாக அமையப்கூடியவையாகும். இத்தகைய உணர்ச்சிவயப்பட்ட பேச்சு மற்றும் முழக்கங்கள் நாகரிக வரம்புகளை மீறியவையே ஆகும். ஆனாலும் இதனை யாரும் பெரும்பாலும் பெரிதுபடுத்துவதில்லை. நெல்லைக்கண்ணன் அவர்களின் அத்தகைய பேச்சுக்கு அவரது வயதுமூப்பும் ஒரு காரணமாக இருக்கலாம். எனினும்,அதனை யாம் நியாயப்படுத்த முயற்சிக்கவில்லை. 

அவருடைய பேச்சு சங் பரிவார்களைத் தோலுரிப்பதாக இருப்பதே அவருக்கு எதிரான கூச்சலுக்குக் காரணமாகும். தொடர்ந்து பாஜக அரசையும் சங்பரிவார்களையும் அவர் பட்டவர்த்தனமாக அம்பலப்படுத்திவருகிறார். ‘நான் இந்து அல்ல; சைவ சமயத்தைச் சார்ந்தவன்’ என்று நெல்லை மாநாட்டில் அவர் பேசியது சனாதன சக்திகளை பெரிதும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அது தான் அவர்களின் எரிச்சலுக்கு முதன்மையான காரணியாகும். 

‘அமித்ஷாவை ஜோலிய முடிச்சுட்டா எல்லாம் சரியாயிடும்’ என்று அவர் பேசியது முழுக்க முழுக்க நகைச்சுவைக்கான ஒன்று. அம்மாநாட்டில் பங்கேற்ற பெண்கள் உள்ளிட்ட பொதுமக்களும் அப்படியே புரிந்துகொண்டு சிரித்தனர். அதில் வேறு உள்நோக்கம் எதுவுமில்லை. ஆனால், அமித்ஷாவைக் கொலைசெய்ய தூண்டுகிறார் என்பதாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால், அவர் மிக இயல்பாக நகைச்சுவைக்காகத்தான் அப்படி பேசினார் என்பது ஊரறிந்த உண்மையாகும்.

அவரும் உள்ளார்ந்த வெறித்தனத்தோடு பேசவில்லை; பங்கேற்ற இஸ்லாமியர்களும் அதனைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. அவ்வாறு அதனைப் பொருட்படுத்துவதாக இருந்திருந்தால் ‘நாரே தக்பீர்’ என தன்னியல்பாக உரத்து முழங்கியிருப்பார்கள். மாறாக,அனைவரும் கொல்லென சிரித்துவிட்டு கடந்துபோய் விட்டனர். நகைச்சுவைக்காக அவர் பேசினாலும் அதனை சரி என்று யாம் நியாயப்படுத்த விரும்பவில்லை. 

எனினும், பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்பினர் இவ்வளவு ஆவேசம் காட்டுவதும் வெறிக்கூச்சலிடுவதும் அவருடைய ‘ ஜோலியை முடிக்கும்’ பேச்சுக்காக அல்ல என்பதை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. மோடி அரசின் மக்கள்விரோதப் போக்குகளையும் பாஜக உள்ளிட்ட சங்பரிவார்களின் சமூகவிரோத நடவடிக்கைகளையும் தனது உரையாற்றலால் தோலுரித்து அம்பலப்படுத்துகிறார் என்பதுதான் அவர்களின் ஆத்திரத்துக்குக் காரணமாகும்.

அத்துடன் அவர் இந்துமத (சைவ) அடையாளங்களுடன் இஸ்லாமியர்களிடையே பேசுகிறார் என்பது அவர்களுக்குக் கூடுதல் எரிச்சலைத் தருகிறது. இந்நிலையில், பாஜக மற்றும் சங்பரிவார்களின் கோரிக்கையை ஏற்று இரவோடு இரவாகக் கைதுசெய்து அவரைச் சிறைப்படுத்தியிருப்பது அதிமுக அரசு எந்த அளவுக்கு பாஜகவுக்கு பணிந்து பணிவிடை செய்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.

அதிமுக அரசின் இத்தகைய ஓரவஞ்சனையான நடவடிக்கைகள் அதன் பலவீனத்தை மட்டுமின்றி, சுதந்தரமின்றி மைய அரசுக்கு அஞ்சி கட்டுண்டு கிடப்பதையும் அம்பலப்படுத்துகிறது. தமிழக அரசின் இப்போக்கு வேதனைக்குரியது என்று கேட்டுக்கொண்டுள்ளார் திருமாவளவன்.